வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

அத்தியாயம் - ௧ - கோவையைத் தாக்கிய பூதம் !

கோவையை அடுத்துள்ளது திருப்பூர். அதைச் சேர்ந்த பகுதி அனுப்பர்பாளையம். அங்கு பித்தளை, செம்பு பாத்திரங்கள் செய்யும் குடும்பங்கள் வாழ்கின்றன.
என் பாட்டனார் திரு. பழனியப்பன் என்பவரும் பாத்திரங்கள் செய்யும் தொழிலாளியாக வாழ்ந்தார். என் பாட்டியின் பெயர் தாயம்மாள். இவர்களுக்குப் பிறந்த எட்டுக்குழந்தைகளில் மூத்த பெண் கன்னியம்மாள்தான் என் தாய். என் தாயார் திருக்குறளும் நைடதமும் ( நளன் - தமயந்தி கதை) நன்கு கற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நைடதம் நூலை இன்று வீரராகவனிடம் தந்து விட்டேன்.
கோவையின் மேற்குப் பகுதியில் உள்ள வேடப்பட்டியில் திரு. மருதாசலன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது இரண்டாவது மகனாகிய் திரு. வீரப்பன் என்பவர்தான் என் தந்தை.
அங்கு நள நாடகம் எனும் கதையை பொம்மலாட்டம் மூலம் மக்களுக்கு காட்டி வந்தார். அவருடைய முன்னோர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும்
என் பாட்டனார் திரு.மருதாசலம் என்பவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர் - முதல் மனைவியின் பிள்ளைகள் ஆந்திராவிலுள்ள க்ர்னூலுக்கும் ( நந்தியால் கிராமம்) கடப்பைக்கும் (ஆதோனி கிராமம்) சென்று விட்டனர்.
இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் இருவர் கோவை உப்பிலிபாளையத்திலும் ஒருவர் வேடப்பட்டியிலும் தங்கி விட்டனர். வேடப்பட்டியில் தங்கியவருக்கு, என் தந்தை சின்னத்தம்பி (எ) வீரப்பன், பெரிய தந்தை பெரிய தம்பி என்பவரும் தங்களுக்கு சொந்தமான வயலை விற்றார்கள். இவர்கள் இருவர் மட்டும் உப்பிலிபாளையத்தில் தங்கிவிட்டனர்.
மூன்றாவது மனைவியின் பிள்ளைகள் வைத்தியர் வீராசாமி என்பவரும் இராமசாமி என்பவரும் மைசூருக்குப் போய்விட்டனர்.
உப்பிலிபாளைய்த்தில் தங்கிவிட்ட சின்னத் தம்பியும் பெரியதம்பியும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.
எனது பெற்றோர் திரு. வீரப்பன், கன்னியம்மாள் ஆகியோருக்குப் பிறந்த பிள்ளைகள் - மாரியாயம்மாள், சுப்பிரமணியன் ( நான்) , அங்கம்மாள் ஆகிய மூவர். நான் பிறந்தது திருப்பூர். வளர்ந்தது கோவை. 1914 ல் கோவையில் தோன்றிய பிளேக் எனும் பயங்கர நோய் மக்களைச் சிதறியோடச் செய்து விட்டது.
என் பெற்றோர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒண்டிப்புதூருக்கு அடுத்துள்ள ஒட்டர்பாளையத்திற்குப் போனார்கள். அங்கே திரு. நஞ்சப்பத் தேவருடைய வீட்டில் வசித்தோம். வீட்டுக்கு வாடகை இல்லை.
அங்கு என் வேட்டியில் காவி நிறத்தை ஏற்படுத்திக் கொண்டேன். எவ்வாறு காவி நிறம் ஏற்பட்ட்து. ஏன் ஏற்படுத்திக் கொண்டேன் என்கிற விவரம் அடுத்த இடுகையில்

எந்தையின் சுயசரிதை

என் தந்தையின் சுயசரிதையிலிருந்தும், என்னிடம் வாய்மொழியாக உரைத்தவற்றிலிருந்து எழுதுகிறேன். (என்னுடைய கருத்துக்களும், என்னுடைய எழுத்துக்களும் அடைப்பு குறியில் குறிப்பிடுகிறேன் - மற்றவை என் தந்தையின் சுயசரிதையிலிருந்து - எனவே, அவரே எழுதுவது போல் அமைந்திருக்கும்)
இந்த சுயசரிதையை அவர் எழுதும் போது அவர் வயது எண்பத்தியேழு (87)
முன்னுரை
நம் பாரத நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு ஒரு சமயம் கூறிய சில வாக்கியங்கள் இங்கு குறிப்பிடுதல் அவசியம் எனக் கருதுகிறேன்.
“ நாட்டின் பெரிய, சமூக, அரசியல், ஆன்மீகத் தலைவர்களின் ஒப்பற்ற வாழ்க்கைக் குறிப்புக்கள் எல்லாம் நம்மைச் சிந்திக்க வைப்பதுடன் அவற்றைப் பின்பற்றவும் செய்கின்றன. நாம் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது, நமக்குப் பின்னால் காலம் எனும் மணலில் நம் அடிச்சுவடுகளைப் பதிய வைத்துக் கொண்டே போய்விடுகிறோம் இறுதியில்”
இந்த வாக்கியங்கள் அடிக்கடி என் நினைவில் தோன்றுவதுண்டு. எனவே, என் நினைவு அலைகளில் கிடைத்த வாழ்க்கைக் குறிப்புகளை இயன்றவரை இங்கு எழுதுகிறேன். குறிப்புகள் வரிசைப்படி இல்லை. காரணம் - என் 87-ஆம் வயதில் நினைவாற்றல் குறைந்துள்ளது.
இதை எழுதுமாறு என் அன்பு மக்கள் இரவிச் சந்திரனும் வீரராகவனும் என்னைத் தூண்டினார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தந்தையைப் பற்றி எளிய அறிமுகம்

என் தந்தை பெயர் திரு.தி.வி.சுப்பிரமணியம்.
தலைமை ஆசிரியராக கோவை அனுப்பர்பாளையம் துவக்க பள்ளியிலும், தமிழ் ஆசிரியராக தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியிலும் பணியாற்றினார்.
தியாகராஜ பாகவதருக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார்.
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள புரவிபாளையம், ஊத்துக்குளி ஜமீந்தாரர்களுக்கு தமிழ் இலக்கிய நயத்தை எடுத்து உரைத்து ஆர்வத்தை தூண்டினார்.
தொண்ணூறு வயதிற்கு மேல் வாழ்ந்தார்.
சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகளில் சில.
௧) தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தான் முதன்முதலாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் நாட்டு நடப்பை அறிந்து கொள்வது அவசியம் எனக் கருதி அறிவிப்பு பலகையில் அன்றைய செய்திகளை எழுதி வந்தார். தற்போது அனைத்து பள்ளிகளிலும் இது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
௨) கோவை புலியகுளத்தில் பாமர மக்கள் அறிந்து பயன் பெற இலவசமாக திருக்குறள் வகுப்பு நடத்தியதை பாராட்டும் வகையில் அவருக்கு எடைக்கு எடை நெல் தரப்பட்டது.
௩) தூய மைக்கேல் பள்ளியில் இறை வணக்கத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.
(வெகு காலமாக இதனை பள்ளியில் பாடி வந்தனர் - தற்போது மாற்றப் பட்டுவிட்டது.)
௪) பேருர் கனகசபையிலிருப்பதைப் போன்று சாக்பீசால் சங்கிலி செய்தார்.
மேலும் பலவற்றைப் பற்றி எழுத உள்ளேன். வாசிப்பவர்களுக்கு மேலும் விவரம் தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.