செவ்வாய், 29 டிசம்பர், 2009

செத்தும் கொடுத்தான் சீதக்காதி....


திருமதி நாயகம் காளிங்கராயர் அவர்களின் இறுதிக் காலம் நெருங்கியது. வேலூர் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. திரு.கிருஷ்ணராஜ் நாயகத்தின் உடலை எடுத்து காரில், நள்ளிரவில் ஊத்துக்குழி கொண்டு சென்றார்.
அன்று மாலை 5 மணிக்கு வழக்கம் போல், ரெட்பீல்ட்ஸிலுள்ள (Red Fields)  திரு.என்.மகாலிங்கத்தின் பேத்தி கற்பகத்துக்கு டியூஷன் சொல்லித் தரப் போனேன். என்னைக் கண்டதும் கருணாம்பாள் ஓடி வந்து, ‘மாஸ்டர், நாயகம் போயிட்டாங்க’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தேன். வீடு திரும்பினேன்.
மறு நாள் காலை ஊத்துக்குழி சென்றேன். திரு.கிருஷ்ணராஜ் எழுந்து வந்து துயரம் நிரம்பிய உள்ளத்துடன் நின்றார். நான் கண்ணீர் ததும்ப அவரது கைகளைப் பற்றினேன். அவருக்கு ஆறுதல் சொல்ல வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. என் கண்ணீரைக் கண்டு, அவர் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, “மாஸ்டர், 20 நாட்களுக்குப் பிறகு நம் கோவை பங்களாவுக்கு வாருங்கள். நாயகத்தின் உடலை உடனே எரித்து விட வேண்டியதாயிற்று” என்றார்.
நான் துயரச் சுமையோடு வீடு திரும்பினேன்.
திரு.கிருஷ்ணராஜ் சொன்னது போல கோவை பங்களாவுக்குப் போனேன். அவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் ஒரு கவர் கொடுத்தார். கவரில் ரூ.1200 இருந்தது. வியப்படைந்த நான் கவரை அவரிடம் திருப்பிக் கொடுக்க முயன்றபோது  - அவர் தடுத்து சொன்னார், “மாஸ்டர், நாயகம் உயிர் பிரிவதற்கு முந்திய நாள் இந்த பணத்தைக் கவரில் வைத்து உங்களுக்கு கொடுக்கும்படி சொல்லியதால், தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் நாயகத்தின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.
நான் கண்ணீர் கலங்கினேன். சிறிது நேரம்  மெளனமாக இருந்தேன். பின்பு கவரைப் பெற்றுக் கொண்டு மானசீகமாக (மனதுக்குள்ளேயே) நன்றியைச் சொல்லிவிட்டு கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன்.
அந்த கவரில் பணத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதம் இன்றும் என்னிடம் இருக்கிறது.
இந்த உண்மை நிகழ்ச்சி ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி வள்ளல்’ என்று சொல்வது போல் வள்ளல்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையே எடுத்து காட்டுகிறது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத சோக நிகழ்ச்சிகள் இரண்டுதான். ஒன்று என் அன்பு மனைவி இலட்சுமியின் மறைவு. மற்றொன்று என் அன்பு மாணவி நாயகம் காளிங்கராயர்.

என்னைப் பற்றி எனது தந்தை...

வீரராகவன் கல்லூரியில் சேர்க்க வேண்டிய காலம் வந்தது. எனது பரம்பரையில் கல்லூரியில் முதுகலை  பட்டம் பெற்றவர்கள் இல்லையென்ற குறையை போக்கிவிட்டான். எனக்கு முதலில் கல்லூரி பீஸ் கொடுத்து உதவியவர்கள் யார் யார்?
 PRICOL  நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு.என். தாமோதரன் என்பவர் இரண்டுமுறை கல்லூரி கட்டணம் கட்ட உதவினார். அதற்கு காரணமாயிருந்தவர் திரு.எல்.பக்தவத்சலம் என்பவர்.
நான் பள்ளியை விட்டு ஓய்வு பெற்றபின், எனது முன்னாள் மாணவர் ஊத்துக்குழி ஜமீந்தார் அவர்களின் மனைவி நாயகம் அவர்களுக்கு கம்பராமாயணம் கற்றுக் கொடுக்கச் சொன்னார்கள்.
சில மாதங்கள் இராமாயண வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அயோத்தி காண்டம், நகர் நீங்கு படலம் சொல்லிக் கொண்டிருந்தேன் ----
இராமனும் சீதையும் இலக்குவனும் அரண்மனையிலிருந்து காட்டுக்கு புறப்ப்டுகிறார்கள். நகர மக்கள் கண்ணீரை ஆறாகப் பெருக்கியவாறு அங்கு வந்து கூடினார்கள். மக்கள் மட்டுமா அழுதார்கள்?
கம்பர் சொன்னதைப் படியுங்கள்
ஆவும்     அழுத    அதன்    கன்றழுத   அன்றலர்ந்த
பூவும்       அழுத   புனல்     புள் அழுத  கள்ளொழுகும்
காவும்     அழுத   களிறு   அழுதகால்  வயப்போர்
மாவும்    அழுதன   அம்மன்னனை  மானவே

கையால் நிலந்தடவிக் கண்ணீரால்  மெழுகுவார்
உய்யாள்  பொற்கோசலையென்று  ஒவாது வெய்துயிர்ப்பார்
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ யென்பார்
நெய்யால் அழல் உற்றது உற்றார் அந்நீள் நகரார்.
இந்த இரு பாடல்களையும் சொல்லிவிட்டு விளக்கத்தையும் நான் சொல்லும்போது, நான் உணர்ச்சி வயப்பட்டு சற்று நிறுத்தினேன். அப்போது நாயகம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
”அம்மா, உள்ளே போய் தண்ணீர் குடித்துவிட்டு வாருங்கள். இந்த காட்சி எவரையும் துயரத்தால் அழும்படி செய்யக்கூடியது.  இனி நாளைக்குப் பாடம் தொடருவோம்” என்றேன்.

திருப்பூர் மருத்துவர் பத்மனாபனின் பணிவு

திருப்பூரில் என் மகன் தியாகராஜனைப் பார்த்து வர மனைவி இலட்சுமியுடன் போயிருந்தேன். இலட்சுமிக்கு உடல் நலம் சரியில்லை. இருமலால் அவதிப்பட்டாள். திருப்பூரிலேயே ஒரு மருத்துவரிடம்  இலட்சுமியை அழைத்துப் போக எண்ணினேன். மருமகள் மணிமேகலை சிலரிடம் விசாரித்து மருத்துவர் பத்மனாபன் பெயரைச் சொன்னதும் அவரைப் பார்க்கச் சென்றோம்.
மருத்துவரின் மருத்துவமனையில் பலர் காத்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பார்த்து விட்டு சென்ற பிறகு நாங்கள் உள்ளே சென்றோம்.
நான் மருத்துவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு  இலட்சுமியை ஒரு நாற்காலியில் அமரச் செய்தேன். அப்போது திடீரென எதிர்பாராமல், மருத்துவர் பத்மனாபன் என் காலைத் தொட்டுக் கும்பிட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன்.
`சார், என்னைத் தெரியவில்லையா?` என்றார்.
`இல்லை`
`சார், நான் உங்கள் மாணவன். நீங்கள் பாடம் நடத்தும்போது அடிக்கடி கதைகள் சொல்வீர்கள்` என்று சொல்லிவிட்டு, தமது சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டுகள் ஐந்து எடுத்து என் கையைப் பற்றிக் கொடுத்துவிட்டு, `சார், என்னை ஆசிர்வதியுங்கள்` என்றார்.
நான் மருத்துவரை வாழ்த்தினேன். பிறகு, `டாக்டர், என் மனைவிக்கு இருமல் தொல்லை அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் பாருங்கள்` என்றேன்.
திரு.பத்மனாபன் என் மனைவியைச் சோதித்துவிட்டு, `சார், நான் மருந்து எழுதித் தருகிறேன். ஆனால் நீங்கள் திருப்பூரில் தங்க வேண்டாம். இங்கே, காற்றில் பஞ்சு கலந்துள்ளது. கோவைக்கே போய்விடுங்கள்` என்று சொல்லிவிட்டு, மேலும், `என் வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும்` என்று அழைத்தார்.
`டாக்டர், உங்கள் உதவியை மறக்க மாட்டேன். சாப்பாட்டுக்கு மற்றொரு சமயம் வருகிறேன். என் மனைவியின் உடல் நலம் முதலில் சரியாகட்டும். நான் கோவைக்கு செல்கிறேன்` என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

உள்ளத்தில் நல்ல உள்ளம்....


வழியில் பார்த்து தன்னுடன் காரில் அழைத்து சென்ற திரு.பி.எஸ்.ஜி.கோவிந்தசாமி அவர்களுடைய மில்லுக்குள் சென்று அவரது அறையில் அமர்ந்தோம். ` நீங்கள் சன்மார்க்க சங்கத்தில் வள்ளலாரைப் பற்றிப் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பாக கூறியது என்ன? சொல்லுங்கள்` என்றார்.
நான் சொன்னேன் “ஊழ்வினைதான் வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. முற்பிறவியில், கண்ணகியும் கோவலனும் பெரும் பாவங்களைச் செய்தார்கள். அவற்றின் விளைவுகளை அடுத்தப் பிறவியில் அனுபவித்தார்கள். ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்என்பது”.
(எனது கருத்து சிலப்பதிகாரத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்று உரைப்பார்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். ஆனால் அரசியலில் பிழை செய்தோருக்கும் உரைசால் பத்தினியை ஏத்தும் உயர்ந்தோருக்கும் ஊழ்வினை ஒரு உரு எடுத்து வந்து உணர்த்தும் என்பதே அடிகளார் உரைக்கிறார் என்பதே எனது கருத்து. இதனால் கோவலன் கண்ணகி திருமணத்தில் வாழ்த்துபவர்கள் நாவில் “காதல்ர் கை நெகிழாமல் தீது அறுகஎன்ற சொற்கள் உருவில் வந்த்து ஊழ்வினை. “கோவலன் கள்வனாகில் கொன்று கொணர்கஎன்ற நாவில் ஊழ்வினை உருத்து வந்தது என்பது தெள்ளென விளங்கும். எனது எளிய தமிழில் இலக்கியம் என்ற வலைப்பூவில் இதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். வீரராகவன்).
நீங்கள் அடிக்கடி இங்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாம்என்றார் கோவிந்தசாமி. பிறகு நான் எழுந்து புறப்பட எண்ணிய வேளையில், “கொஞ்சம் பொறுங்கள்என்று சொல்லிவிட்டு, தமது காசோலை ஒன்றில் ரூ2000 என்று எழுதி என்னிடம் தந்தார்.
நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அவருக்கு நான் நன்றி சொன்னேன். “ஐயா, குசேலருக்கு கண்ணபிரான் முகமறிந்து செய்த உதவியைப் போல செய்து விட்டீர்கள்என்று சொல்லும்போது என் கண்கள் குளமாயின.
அதன்பிறகு நான் அவரிடம் சென்று இலக்கியங்களைப் பற்றிப் பேசினேன். நான் போனபோதெல்லாம் எனக்குப் பலமுறை ரூ.900/-, ரூ.600/-, ரூ.1000/- கொடுத்து என் வறுமை நிலையைப் போக்கிய அந்த வள்ளலை நான் மறக்க முடியுமா?

எனக்குப் பண உதவி செய்த வள்ளல்கள்
(சிலரைப் பற்றி இங்கு குறிப்பிட்டாலும் ஒரு தனி பட்டியலே எழுதி வைத்திருக்கிறார் நன்றி எனக் குறிப்பிட்டு. அதனை தன் சுயசரிதையின் இறுதியில் எழுதியிருப்பதால் நானும் இறுதியில் அந்த பட்டியலை வெளியிடுகின்றேன்.சிலரின் உதவிகளை வாய்மொழியாக நினைவு கூர்ந்து கூறியுள்ளார் வீரராகவன்)
என் முன்னாள் மாணவர்கள் திரு.சோமு ( சோமு மெடிக்கல்ஸ், சாயிபாபா காலனி, கோவை), திரு. பி.சுப்பிரமணியம் ( சாந்தி கியர்ஸ்), திரு.சந்திர சேகரன் (ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ்), திரு.ஜெகதீசன் (சிட்கோ), (பக்கத்தின் அடிக்குறிப்பில் திரு.குப்புராஜூ (அசோகா பாக்கு), காட்டூர் சீனிவாசன், திரு.எஸ்.கோவிந்தராஜன் (ஆறு கவலை தோட்டம், குறிச்சிக்கோட்டை, உடுமலை) திரு.சம்பந்தம் (ஏர்கான்). எனக் குறிப்பிட்டுள்ளார்)



இரவிச்சந்திரனின் திருமணமும், உதவி செய்த நல்ல உள்ளங்களும்

இரவிச்சந்திரனுக்கு மேட்டுப்பாளையத்தில் விதவைத் தாயுடன் வசித்துக் கொண்டிருந்த சரசுவதியைத் திருமணம் செய்து வைத்தேன். சரசுவதி பிரிக்கால் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் என் அன்பு மகள் பானுமதியும் அவளது கணவர் திரு.பாலசுப்பிரமணியமும் அவர்களது உதவியை நான் எக்காலத்தும் மறக்க முடியாது. இரவிச்சந்திரன் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இரவிச்சந்திரனை I.T.I யில் சேர்த்துப் படிக்க வைத்தேன். அவன் படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டான். காரணம் எனது வறுமை நிலைதான். அதை நினைத்து நானும் இலட்சுமியும் வருத்தப்படாத நாளே கிடையாது.
ஆனால் சில ஆண்டுகள் கழிந்தபின், என் பொருளாதாரம் சற்று உயரத் தொடங்கியது. ஒரு நாள் எதிர்பாராமல் அவினாசி ரோட்டில் நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திரு.பி.எஸ்.ஜி கோவிந்தசாமி தமது காரில் எதிரில் வந்தார். என்னைக் கண்டதும் காரை நிறுத்தி என்னை தன்னுடன் காரில் வருமாறு அழைத்தார்.

திங்கள், 21 டிசம்பர், 2009

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

இரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்ய எண்ணிக் கொண்டிருந்த வேளையில், என் அன்பு மனைவி இலட்சுமியின் உடல் நலம் கெட்டு விட்டது. டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் இலட்சுமியைச் சேர்த்தேன். 10 மாதங்கள் அங்கு சிகிச்சை அளித்தும் பயனில்லை. பின்பு, சென்னையிலுள்ள டாக்டர் அரங்கபாஷ்யம் மருத்துவமனைக்கு இலட்சுமியை அழைத்துச் சென்றார்கள் என் மக்கள் - மருமகள் மணிமேகலை ஆகியவர்கள். டாக்டர் அறுவை சிகிச்சை செய்தார். எல்லோரும் லட்சுமிக்கு உதவியாக சென்னையில் ஒரு லாட்ஜில் தங்கினார்கள். ஒரு மாதத்துக்குப் பின் லட்சுமியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள். பணம் நிறைய செலவு செய்தும் லட்சுமி முழுமையாக குணமாகவில்லை. இங்கு 2 மாதம் மருத்துவ மனையில் (குமரன் மருத்துவமனையில்) சேர்த்து சிகிச்சையளித்தோம். அத்தனையும் வீணாகிவிட்டன. ஏன்? அதுதான் விதி.
என் அன்பு மனைவி இலட்சுமியை 22.9.1992ல் இழந்து மீளாத் துயரத்தில் ஆழ்ந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் - என் ஆயுட்காலம் முழுவதும் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி இது.
ஒராண்டு கழிந்தது. லட்சுமியின் மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவிய அத்தனை பேருக்கும் பணம் திருப்பி கொடுக்க வேண்டாமா?
ஆகவே, எங்களுக்கிருந்த ஒரே சொத்து 5 1/2 செண்ட் காலி வீட்டுமனை அந்த இடத்தை விற்றுக் கடன்களைத் தீர்த்துவிட எண்ணினேன்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும். இலட்சுமி உயிருடன் இருந்தபோது, எங்கள் வீடு சிறிது பழுதடைந்தது. அதனால் இடிந்த வீட்டின் கூரையைப் பிரித்து ஓடுகளையும் மரச்சட்டங்கள் கதவு, சன்னல் எல்லாவற்றையும் சுலோச்சனாவுக்குக் கொடுத்து விட்டோம்.( அன்பளிப்பாக). அவள் அவற்றை லாரியில் ஏற்றி பல்லடத்துக்கு எடுத்து போய்விட்டாள்.
வீட்டுமனையை ஒரு இலட்சத்து 55 ஆயிரத்துக்கு அருகே வசித்த திரு.சுப்பிரமணிய அய்யருக்கு விலைக்கு கொடுத்து விட்டோம். அந்த பணத்தை கலைச்செல்வனுக்கும், பானுமதிக்கும், சம்பந்தி திரு.சீனிவாசனுக்கும், மணிமேகலைக்கும் கொடுத்து கடனை தீர்த்து விட்டோம். ஆனால் இரவிச்சந்திரன் மட்டும் தான் கொடுத்த சீட்டுப் பணம் ரூபாய் 10,000 திரும்ப பெற விரும்பவில்லை. `அம்மாவுக்குக் கொடுத்த உதவியை நான் திரும்ப பெற மாட்டேன்` என்று சொல்லியது அவனது பெருந்தன்மையை காட்டுகிறது. மீதியிருந்ததோ ரூ.3000. அதனை வீரராகவனுக்கு கொடுத்து விட்டோம். (அந்த பணத்தில் நான் இரு புத்தக அலமாரி செய்தேன் - வீரராகவன்).
எல்லாம் முடிந்தது. என் மனம் நிம்மதியடைந்தது.

என் குடும்பத்தைப் பற்றி...

 நான் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றது 1969. மேலும் ஓராண்டு வேலை கொடுத்து உதவி செய்தார் பாதர் சின்னையன். ஆனால் பென்ஷன் 1968 வரையுள்ள காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ரூ.33/- அளித்தது அரசாங்கம். அதுவும் சென்னை ஏ.ஜி. ஆபிசில் (அக்கவுண்ட் ஜெனரல்) பாகவதரின் இரண்டாவது மாப்பிள்ளை திரு.சுந்தரமூர்த்தியை நேரில் சந்தித்து பேசிய பிறகு ஒரே வாரத்தில் எனக்கு பணம் கிடைத்தது.
இனி என் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
எங்களுக்கு (எனக்கும் இலட்சுமிக்கும்) நான்கு ஆண் குழந்தைகள் - தியாகராஜன், கலைச் செல்வன், இரவிச்சந்திரன், வீரராகவன் ( இந்த இடுகையை எழுதும் நான்).
 இரண்டு பெண் குழந்தைகள் - பானுமதி, (மனு என்கிற) பத்மினி.
இவர்களில் கலைச் செல்வன் மட்டும் குடும்பத்தில் பற்றுதலோ, பாசமோ இல்லாமல் இருந்தான். சற்று முரட்டுத்தனமாகவும் இருந்ததால் அவனுடைய திருமணத்துக்குப் பின் குடும்பத்திலிருந்து பிரிந்தே போய்விட்டான்.
தியாகராஜனுக்குப் பழனியிலிருந்த திரு.சீனிவாசன் என்பவருடைய மகள் மணிமேகலையை திருமணம் செய்து வைத்தேன்.
கலைச்செல்வனுக்கு நெய்க்காரப்பட்டியிலுள்ள திரு. நடராஜன் என்பவருடைய மகள் கலாவதியை திருமணம் செய்து வைத்தேன்.
என் பெரிய பெண் பானுமதியைப் பெரிய நாய்க்கன் பாளையத்திலுள்ள திரு. ரங்கசாமி என்பவருடைய மகன் பாலசுப்பிரணியன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன்.
அடுத்து ஆத்தூரிலுள்ள திரு. பொன்னுசாமியும் மற்றும் சிலரும் என் மகள் பத்மினியைப் பெண் கேட்க வந்தார்கள்.
நான் சொன்னேன், `ஐயா, உங்கள் மகனுக்குப் பெண் தருகிறேன். ஆனால் நகை எதுவும் போட மாட்டேன். நகை வேண்டுமென்றால், கடைத்தெருவில் நகைக் கடை வைத்திருப்பவர்களிடம் பெண் கேளுங்கள். என்னால் எளிமையாக  சிறப்பாக திருமணம் செய்து வைக்க முடியும். காப்பி சாப்பிடுங்கள்` என்றேன்.
அவர்கள் கோபித்துக் கொண்டு எழுந்து போய்விட்டார்கள்.
'God's will is mightier than human force. There is a divinity that shapes our ends.'
20 நாட்களுக்குப் பின் ஆத்தூர்காரர்கள் மீண்டும் என்னிடம் வந்து `ஐயா, நகை எதுவும் வேண்டாம். பெண் கொடுத்தால் போதும். திருமணம் ஆத்தூரில் வைத்துக் கொள்வோம்` என்றார்கள். நான் ஒப்புக் கொண்டேன்.
பெரிய மாப்பிள்ளை திரு.பாலசுப்ரமணியன் L.M.W -ல் வேலையில் இருந்தார். (தற்போது ஓய்வு பெற்று சொந்தமாக தொழில் செய்கிறார் - மூன்று மகன்கள் - இருவருக்கு திருமணமாகி விட்டது - வீரா)
இரண்டாவது மாப்பிள்ளை திரு.ஜெயபால் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தார்.
இரவிச்சந்திரனுக்குத் திருமணம் செய்ய எண்ணிக் கொண்டிருந்த வேளையில் ஒரு தடங்கல் ஏற்பட்டது.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

குறள் போல் வாழ்

கோவையை அடுத்துள்ள சவுரிபாளையத்தில் 6 ஆண்டுகள் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன். மாரியம்மன் கோவிலில் மாலை 7 மணி முதல் 9 மணி வரை  ஞாயிறுதோறும் வகுப்பு நடந்தது. 25 முதல் 35 வரை மக்கள் வ்ருவார்கள். இடையிடையே குறளுக்கு தக்கபடி சிறு சிறு கதைகள் சொல்வதை மக்கள் விரும்பிக் கேட்டார்கள்.
இரவில் நான் வீடு திரும்ப என்னை வண்டியில் அனுப்பி வைத்தார்கள். ஆறு ஆண்டுகள் முடிந்தபின் எனக்கு பாராட்டு விழா நடத்தி எடைக்கு எடை நெல்லும், ஒரு தட்டு நிறைய ரூபாய் நாணயங்களும், பொன்னாடையும் அளித்து பெருமைப் படுத்தியவர்கள் யார்? அவர்கள் தான் திரு.ஆறுமுகத் தேவரும் அவரது மனைவியார் திருமதி வள்ளியம்மாளும்.
இந்நிகழ்ச்சியை நான் என்றும் மறக்க முடியாத ஒன்று. திருக்குறள் வகுப்பில் நான் சொன்ன விளக்கங்கள் என் மனதையும் செம்மைப் படுத்தியது.
அடுத்து புலியகுளத்தில் ஓராண்டு குறள் வகுப்பு நடத்தினேன். அதற்கு ஏற்பாடு செய்து பொருளுதவி செய்த திரு. குப்புராசு என்பவர் பிற்காலத்தில் தமிழ் கல்லூரியில் சேர்ந்து ‘புலவர்’ பட்டம் பெற்றார்.

பிரதமர் இந்திராகாந்தியுடன் ஆசிரியர்கள் சந்திப்பு

ஒரு நாள் பாதர் பிரதமரை பார்த்து வர எண்ணினார். எங்கள் பள்ளியில் பணியாற்றிய திரு.கே.சுப்பிரமணியம் என்கிற கணித ஆசிரியரின் தமையனார் டெல்லியில் இராணுவப் பிரிவில் ஒரு ஆபிசராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மூலமாக பிரதமர் இந்திராகாந்தி அவர்களை பார்க்க ஏற்பாடு செய்தோம்.
ஏப்ரல் மாத விடுமுறையில் பாதர் சின்னையன் தலைமையில் ஆசிரியர்கள் புறப்பட்டோம். டெல்லியை அடைவதற்கு முன்பு 110 மைலுக்கு முன்னுள்ள ஆக்ராவை அடைந்தோம். மன்னர் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டிய பளிங்குக் கல்லால் ஆன ‘தாஜ்மகாலை’ப் பார்த்து மகிழ்ந்தோம்.
பின்பு டெல்லியை அடைந்தோம். சப்தர்ஜங் சாலையில் பிரதமரின் இல்லம் இருப்பதால் 1 கிலோ மீட்டருக்கு முன் இராணுவக் காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். எங்களிடமிருந்த அனுமதி கடிதத்தைக் காட்டினோம்.
ஒரு மணி நேரத்துக்குப் பின்னால் எங்களை அனுமதித்தார்கள். அவரது இல்லம் சிறியதாயிருந்தது. ஒரு அறையில் காத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் பிரதமர் வந்தார். நாங்கள் வணக்கம் சொன்னோம். கைகூப்பி வணக்கம் செய்து எங்களை அமரச் சொன்னார்.
“ நாங்கள் கோயம்புத்தூரிலிருந்து வருகிறோம். தூய மைக்கேல் பள்ளி ஆசிரியர்கள். தங்களைக் காண 2000 மைல் தொலைவிலிருந்து வந்திருக்கிறோம். உங்கள் அறிவுரையைத் தாருங்கள்” என்றேன்.
பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், “ நீங்கள் ஆசிரியர்கள். உங்களுக்கு நான் என்ன சொல்வது? மாணவர்களுக்கு நாட்டுப் பற்றைக் கற்றுக் கொடுங்கள். இந்தியாவின் பெருமையை அவர்கள் உண்ருமாறு எடுத்துச் சொல்லுங்கள்” என்றார்.

பிறகு மேலும் ஆசிரியர்களின் கடமையையும் மாணவர்களின் பொறுப்பையும் பற்றி எங்களுடன் சிரித்தபடியே உரையாடினார். பிறகு அவருடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.

அதிசயங்களே அசந்து போகும் அதிசயம்....

ஐதராபாத்திலுள்ள சாலார்ஜங் மியூசியத்தில் உள்ளது “மகதலேனாள்” எனும் சிற்பம். பெண்ணின் முகம் துணியால் மூடப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, அது துணியல்ல, சிற்பி அவ்வாறு சலவைக் கல்லில் செய்திருக்கிறான். அதை எப்படி செய்தான்? அதைப் பார்த்து பிரமித்துப் போனேன். உலகெங்கும் சிற்பக்கலை புகழ் பெற்று விளங்குகிறது.
அந்த ஒரு சிலைக்கு மட்டும் 5 கோடி தருவதாக (அந்த காலக் கட்டத்தில்) நிஜாமிடம் வெள்ளைக்காரர்கள் வெளியேறும்போது விலைக்கு கேட்டார் நிஜாம் மறுத்து விட்டார். - இந்த செய்தியை ஒரு காவலாளி எங்களிடம் சொன்னார்.
வெனிஸ் நகரத்தின் சிற்பி பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். - ஏன்? நானும் ஒரு சிற்பி. எனது சிற்பத்தை தூய மைக்கேல் மேனிலைப் பள்ளியில் வைத்துவிட்டு வந்தேன். அதன் அருமையை அறியாதவர்கள் அதை அழித்து விட்டார்கள். (அதன் புகைப்படம் உள்ளது. விரைவில் இடுகையில் வெளியிடுகிறேன் - வீரராகவன்).
வழியில் கோவா சென்றோம். அங்கே இன்னொரு அதிசயம் கண்டேன்.
எங்களை ஒரு ச்ர்ச்சுக்குள் கூட்டிச் சென்றார் பாதர் சின்னையன்.
ஒரு கண்ணாடிப் பெட்டியில் செயிண்ட் பிரான்சிஸ் எனும் கத்தோலிக்கப் பாதிரியாரின் உடல் 400 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1964ல் பார்த்த உடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வெளியே எடுத்து வந்து மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். நாங்கள் பார்த்தபோது உடல் 3 1/2 அடி நீளமாகக் குறைந்து இருந்தது. இனி, கி.பி 2012ல் பார்க்க முடியும்.
பின்பு நாங்கள் பம்பாய்க்குச் சென்றோம். அன்று மாலையில் மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் போப்பாண்டவர் பேசினார். அவரது பேச்சை அப்போதே டைப் செய்து மக்களுக்கு அதன் பிரதிகளை வழங்கினார்கள். எங்கள் பாதருக்கும் ஒன்று கிடைத்தது. அந்த பிரதியைப் பாதர் என்னிடம் கொடுத்தார். நான் அதை எனது டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
பம்பாய் பயணம் ஒரு இனிய அனுபவம்.
ஒரு நாள் பாதர் சின்னையன் எனக்கு ஒரு அழகான கண் கண்ணாடி வாங்கி கொடுத்தார். அதை ஓராண்டுக்கு மேல் அணிந்து கொண்டிருந்து விட்டு பின் நீக்கி விட்டேன். அவருக்கு பக்குவமாக சொல்லி சமாதானம் செய்து விட்டேன்.
( என் தந்தை பிறகு இறுதி வரை கண்ணாடி அணியவே இல்லை. நானோ பத்து வயதிலேயே என் தந்தையாரின் அறிவுரை கேளாது இரவிலும் போதிய வெளிச்சமில்லாத சமயத்திலும் படுத்து கொண்டே படித்த பழக்கத்தினால் கண்ணாடி அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. - வீரராகவன்)
பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சென்று பார்த்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம். அதைப் பற்றி அடுத்த இடுகையில்