வியாழன், 22 அக்டோபர், 2009

சிலையெடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

பாதர் சின்னையன் என்னை அதிகமாக நேசித்தார். அவர் என்னிடம் கலந்து பேசாமல் எதையும் செய்ய மாட்டார். பாதருடைய பிறந்த நாளிலும் மற்றும் விழாக்களின்போதும் அவர் ஆசிரியர்களுக்கு இரு வகை விருந்து (சைவம்+அசைவம்) கொடுத்து மகிழ்விப்பார். இந்த பாரபட்சமற்ற செயல் அவரது புகழை மேலும் உயர்த்தியது. இவ்வாறு தலைமை  ஆசிரியர் தம்முடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருந்து கொடுப்பதும்,  சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களை  ஏகடியம் செய்யாது, ஒதுக்காது, மதித்து உபசரிப்பது வேறு எங்குமே காண முடியாது. பாதர் சின்னையன் காலம் புனித மைக்கேல் மேனிலைப் பள்ளியின் பொற்காலம்.
1964ல் ரோமாபுரிலிருந்து போப்பாண்டவர் ஜான்பால் பம்பாய் வருவதாக கேள்வியுற்ற பாதர் சின்னையன் ஆசிரியர்களை  அழைத்துக் கொண்டு பம்பாய் போக திட்டமிட்டார். பள்ளி பேருந்தில் நாங்கள் டிசம்பர் மாதம் சமையற்காரருடன் புறப்பட்டோம்.
வழியில் கத்தோலிக்கப் பள்ளிகளில் இரவு நேரங்களில் தங்கினோம். ஐதராபாத்தில் உள்ள "சாலார்ஜங் மியூசியம்" கண்டுகளித்தோம்.
உலகில் வேறு  எங்கும் காணமுடியாத "மகதலேனாள்"  எனும் ஒரு பெண்ணின் சிலை கண் கொள்ளாக் காட்சியாகும்.  அப்படியென்ன அதில் விசயம்?

லெமூரியா கண்டம் இருந்ததா?

"குமரிக் கண்டம்" படத்தை  ஒரு பெரிய தாளில் வரைந்து பள்ளிச் சுவரில் வைத்தேன். எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஒரு ஆசிரிய மாநாட்டுக்கு வெளியூர்களிலிருந்த வந்த ஆசிரியர்கள் அதனைப் பார்த்து வியப்படைந்தனர். பாதர் சின்னையனிடம் விசாரித்துவிட்டு என்னை சந்தித்து விளக்கம் பெற்றார்கள்.  பாதர் சின்னையனிடம் என் மதிப்பு உயர்ந்தது.
(என் தந்தையாரிடம் இருந்த ஆதாரங்களில்  கீழ்க்கண்டவாறு  குறிப்பிட்டு எழுதியுள்ளார்.  அவர் வரைந்த படத்தையும்  விரைவில் வெளியிடுகிறேன் -  வீரராகவன்)
25000 ஆண்டுகளுக்கு  முன்பிருந்த 'லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியே 'குமரிக் கண்டம்'.  இது 3 முறை கடல் பொங்கியதால் அழிந்தது.
முதல் கடல்கோள் - கி.மு 2378
இரண்டாவது கடல்கோள் - கி.மு 504
மூன்றாவது கடல்கோள் - கி.மு 306
ஆதார நூல்கள் -  மகாவமிசம், தீபவம்சம், இராஜாவளி ஆகிய இலங்கை  வரலாற்று நூல்கள்.

ஆனால்  இதைப் பற்றி தற்போது பல கருத்துக்கள் வருகின்றன.

அதனைப் பற்றி இந்த இடுகைகளில்  காணலாம்.
http://velu.blogsome.com/2http://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.htmlhttp://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.html006/03/25/l/
http://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.html

செவ்வாய், 20 அக்டோபர், 2009

பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நாட்டு நடப்பு அறிய ஒரு வழி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாதர் அருள்சாமி அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். நான் வருத்தப் பட்டேன். அவர் என்னிடம் கூறினார்- "நான் அமெரிக்காவுக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. உங்களைப் பற்றிப் பாதர் சின்னையனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் பள்ளியை விட்டு விலக வேண்டாம்" என்று சொல்லிவிட்டு என்னை வாழ்த்தினார். அவருக்கு பிரிவுபசாரம் நடந்தது.
பாதர் சின்னையன் பள்ளியில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். மாணவர்களை விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு ஆசிரியர்கள் பேருந்தில் அழைத்து செல்ல வேண்டும் என்ற புதிய முறையை கொண்டு வந்தார். அதனால் நாடு முழுவதும் சுற்றி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கோவை மாவட்டத்திலேயே முதன்முறையாக - 1958ல் பள்ளிகளில் ஒரு வழக்கத்திற்கு முன்னோடியாக அறிமுகம் செய்த பெருமை எனக்கு உண்டு. அதாவது - பள்ளிக் கட்டிடத்தில் வெளிப்புறச் சுவற்றில் பெரிய கரும்பலகை  கட்டித் தரும்படி கேட்டேன். 
தினமும் காலை 7.30 மணிக்குப் பள்ளிக்குச் சென்று விடுவேன். "The Hindu" பத்திரிக்கையையும் "தினமணி" பத்திரிக்கையையும் பியூன் என்னிடம் கொடுத்ததும் நான் முக்கியமான செய்திகளைக் கரும்பலகையில்  எழுதி வைப்பேன்.  மாணவர்களும் ஆசிரியர்களும் அன்றைய நாட்டுநடப்பு செய்திகளைப் படிப்பார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த பாதர் சின்னையன் எனக்கு  அதற்காக மாதம் ரூ.30/- கொடுத்து வந்தார்.
இதனைக் கண்ட வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் என்னைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
மற்றொரு சிறப்பு உண்டு. அதாவது பிரம்பைக் கையில் தொடாமலேயேஅப்பள்ளியில் இறுதி வரை  பணியாற்றி ஓய்வு பெற்றேன்.