வியாழன், 25 பிப்ரவரி, 2010

மருத்துவருக்கு ஒரு மருத்துவ அட்வைஸ்

என் மகன் வீரராகவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பில் பெஞ்ச் ஒன்று அவன் கால் மீது விழுந்து எலும்பு முறிந்தது. நான் அவனை என்  முன்னாள் மாணவர் மருத்துவர். தியாகராஜனிடம் காட்டினேன்.
அவர் அவனுக்கு `தாமஸ் கட்டு` போட்டு ஒரே மாதத்தில் குணப்படுத்தி வி்ட்டார். 
மற்றொரு சமயம் எனக்கு 70 வயதான சமயம் பெரிய கடைவீதியில் நடந்து செல்லும்போது, மாட்டுச் சாணத்தின் மீது கால் வைத்ததால் வழுக்கி விழுந்தேன். வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 22 நாட்களில் என்னை குணப்படுத்தி விட்டார்.
இத்தகைய ‘தாமஸ் கட்டு’ சிகிச்சை அப்பொழுதே மிக அரிதாக செய்யப்பட்டது. தற்போது மருத்துவர்களுக்கு எக்ஸ்ரே , ஸ்கேன் ரிப்போர்ட் இல்லாமல் சிகிச்சை செய்வதில்லை. செய்தாலும் ஸ்டீல் பிளேட்  வைத்து சீக்கிரம் முடித்து விடுகிறார்கள். செலவும் அதிகம். ( நான் மருத்துவம் பயின்றதில்லை என்பதால் அதிகம் விமர்சனம் செய்யவில்லை.) 
மருத்துவரின் மனைவி ஒரு பி.ஏ பட்டதாரி. ஆனால் அவரால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. என்னை அழைத்து ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கச் சொன்னார். நான் ஓராண்டு சொல்லிக் கொடுத்தேன்.
மருத்துவருக்கு ஒரு அட்வைஸ்
மருத்துவர் தியாகராஜனின் உடல் பருமனாக இருக்கும். வயிறு பெரியதாக இருக்கும். நான் அவரிடம், “டாக்டர், உங்கள் வயிறு பெரியதாக இருப்பது நல்லதல்ல. உங்கள் மனைவி மீனாட்சியின் உடலைப் போல மெலிந்து இருப்பது நல்லது. நான் டாக்டர் இல்லை. ஆனால் ஒரு சோவியத் நாட்டு விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.
The secrets of Long Life -
  1. Getting Married, having children.
  2. Living in high places.
  3. Eating Moderately
  4. Drinking well - water
  5. Eating fruits and nuts
  6. Breathing pure air
  7. Keeping body slim.
Dr.Mislimov said, " The man who lives to a ripe old age is the one to whom life is a joy.
  1. Who does not envy others. 
  2. Who does not harbour malice
  3. Who sings a lot and cries a little
  4. Who gets up at dawn
  5. Who lives to work
  6. Who knows how to have a good time
  7. Who walks a long distance daily
  8. Who is always active
இவ்வாறு நான் சொன்னபோது டாக்டர் சிரித்தார். 
மூன்று ஆண்டுகளுக்கு பின்பு ஒரு நாள் நான் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர் சோகமாக இருந்தார். முகம் கறுத்திருந்தது. “டாக்டர், உங்கள் உடம்புக்கு என்ன?” என்று கேட்டேன்.
”சார், என் நுரையீரல்களில் ஒன்று கெட்டுவிட்டது. நான் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும். விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்றார். நான் வருத்தப் பட்டேன். அவரை வாழ்த்தினேன்.
ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்று சொன்னார்கள். டாக்டர் உயிருடன் திரும்பவில்லை. உடலை மட்டும் விமானத்தில் கொண்டு வந்தார்கள்.
(இரைப்பை பெரிதானால், இருதய நோய், நுரையீரல் நோய் வரும் வாய்ப்பு அதிகம். - 50, 60 வயதுக்கு மேல் உணவுக் கட்டுப்பாடு அவசியம். நான் உணவில் எச்சரிக்கையாக இருந்து வருகின்றேன்.)
மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில வாக்கியங்களின் பொருள்.
நீண்ட வாழ்க்கையின் இரகசியங்கள்.
1. திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெறுவது.
2. உயர்ந்த இடங்களில் வசிப்பது.
3. உணவு கட்டுப்பாடு
4. கிணற்று நீரைப் பருகுவது.
5. பழங்களை உண்பது
6. சுத்தமான காற்றை சுவாசிப்பது
7. உடலை மெலிதாக வைத்துக் கொள்வது.
மருத்துவர் மிஸ்லிமோவ் கூறினார், “ நீண்ட நாள் வாழ்பவனுக்கே வாழ்க்கை ஒரு இன்பமே”
1. பிறர் மேல் பொறாமை கொள்ளாதே.
2. பிறருக்கு தீங்கினை எண்ணாதே.
3. நிறைவாய் பாடு, குறைவாய் அழு
4. அதிகாலை எழு
5. வேலையை விரும்பு
6. நேரத்தை திட்டமிட்டு செலவழி
7. நீண்ட தூரம் நட
8. ஊக்கத்துடன் செயல்படு.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

புரவி பாளைய ஜமீனின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன? -3

உண்மையான ஜமீந்தார் கோபன்ன மன்றாடியார் நோட்டக்காரரின் வெற்றிச் செய்தியைக் கேட்டு, அரண்மனைக்குள்ளிருந்து வெளியே வந்து நோட்டக்கார வீரப்பனை நெஞ்சாரத் தழுவி, மாலை போட்டுப் பாராட்டினார். அவருக்கு விருந்து கொடுத்து கவுரவித்தார்.
அது மட்டுமல்ல, தமது நன்செய் நிலத்தில் 10 (பத்து) ஏக்கர் நிலத்தை நோட்டக்காரருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துப் பட்டாவும் செய்து வைத்தார். அந்த பட்டா அரண்மனையில் இருக்கிறது.
இத்தனை காலத்துக்குப் பிறகு, அந்த வீரப்பன் சந்ததியில் வந்துள்ள நான் ஜமீந்தாரிடமிருந்து கேட்டுப் பெறுவது எளிதான காரியமன்று.
என் தகப்பனார் (அவர் பெயரும் வீரப்பன்தான்) என்னிடம் சொல்லி, ஜமீந்தாரின் பேரன்கள் என்னிடம் தூய மைக்கேல் மேனிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் அந்த அன்பளிப்பு நிலத்தைப் பற்றிக் கேட்கும்படி சொன்னார்.
`எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலத்தைப் பற்றிக் கேட்க நான் விரும்பவில்லை. ஜமீந்தாரின் கவுரவத்தையும், உயிரையும் காத்த எனது முப்பாட்டனாருக்குக் கொடுக்கப்பட்ட நிலம் நமக்கு கிடைக்க வேண்டுமென்ற விதி இருக்குமானால் எப்போதாவது என் சந்ததியினருக்கு கிடைக்கும்.` என்று சொன்னேன்.
இன்று ஜமீந்தாரின் குடும்பம் அழிந்து விட்டது. அங்கே பல ஆண்டுகளாகத் தங்கியிருந்த ஒரு சாமியாரிடம் (கோடி சாமியார் என்று அழைப்பார்கள்) சொன்னார்கள் - `சாமி, நீங்கள் அரண்மனைக்கு வந்த பிறகுதான் இந்த அழிவு ஏற்பட்டது. காரணம் என்ன? என்று கேட்டார்கள். 
அவர் சொன்னார் - ` அம்மா, உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள் உங்களுடைய முன்னோர்கள் செய்த பாவ வினைகள்` என்றார். தற்போது அந்த கோடி சாமியாரும் காலமாகி விட்டார்.
ஊத்துக்குளி ஜமீந்தாரின் குடும்பத்தில் நாயகம் புற்று நோயால் அவதிபட்டு இறந்தார். மகன் விவேகானந்தன் நடுரோட்டில் கோவையில் துப்பாக்கியால் சுடப்பட்டு மாண்டார். அவரை கூட இருந்தே நண்பனாய் இருந்து பின்னர் தவறான ஆசையால் மனம் மாறி சதி திட்டம் தீட்டி  நண்பனையே கொலை செய்த வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி நிறுவனங்களின் அதிபர்  வெங்கட்ராமன் செய்த குற்றம் உறுதிபடுத்தப்பட்டு சிறை தண்டனை பெற்று பின்னர் தானே தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன் செய்த வினைகளின் பயன்களை ஒருவன் பிற்காலத்தில் அனுபவித்தேயாக வேண்டும். அல்லது சந்ததியினர் அனுபவிக்க நேரிடும்.

புதன், 17 பிப்ரவரி, 2010

புரவி பாளைய ஜமீனின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன? -2

என் பாட்டனார் மருதாசலத்தின் தந்தை வீரப்பன் என்பவர் அந்த ஜமீந்தாரிடம் நோட்டக்காரராக இருந்து வந்தார். அதாவது `வீரராயப் பணம்` எனும் தங்க நாணயங்கள் சோதித்துப் பார்த்து நல்ல தரம் உள்ளவையா இல்லையா என்று பார்ப்பது. ஜமீந்தார் எனது பெரிய பாட்டனாராகிய வீரப்பனை முக்கியமான விஷயங்களுக்கு ஆலோசனை கேட்பார். இப்போதும் தம்மிடம் வரச் செய்து, எல்லா விவரங்களையும் அவரிடம் கூறினார். தாம் எவ்வளவுதான் சுக போகங்களுடன் வாழ்ந்தாலும், கோர்ட்டுக்குப் போய் கை கட்டி நின்று அவமானப்படுவதை விடச் சாவது மேலானது என்று தலை குனிந்தவாறு கம்மிய குரலில் சொன்னார்.
அப்போது நோட்டக்காரராகிய வீரப்பன் சொன்னார், ` நீங்கள் மனம் கலங்க வேண்டாம் - எனக்கு ஒன்று தோன்றுகிறது. நீங்களும் நானும் ஒரே நிறம், ஏறக்குறைய ஒரே  மாதிரி பருமனான உடம்பு, ஒரே மாதிரியான முகத் தோற்றம் - ஆகையால், உங்களுடைய தலைப்பாகை, கோட்டு, கைத்தடி, சால்வை, குதிரை பூட்டிய வண்டி எல்லாவற்றையும் எனக்குத் தாருங்கள் - நான் கோர்ட்டுக்குப் போகிறேன். நீங்கள் அரண்மனைக்குள்ளேயே இருங்கள். வெளியே வர வேண்டாம்.` என்று சொன்னார். ஜமீந்தார் ஒப்புக் கொண்டார்.
குறிப்பிட்ட நாள் காலையில் நோட்டக்கார வீரப்பன் புறப்பட்டார். எப்படி? தலையில் சால்வையை முக்காடு போட்டு, வெட்கம் அடைந்தவரைப் போலத் தலை குனிந்தபடியே சுமார் 10 மணிக்கு கோர்ட்டை அடைந்து வெளியே ஒரு மரத்தடியில் வண்டியில் அமர்ந்திருந்தார்.
கோர்ட்டில் அன்று பெருங்கூட்டம். ஜமீந்தாருக்கு தண்டனை வழங்குவதைக் காண வந்தவர்கள் ஏராளம்.
ஜமீந்தார் ( நோட்டக்காரர்) வண்டியிலிருந்து இறங்கி, முக்காடு போட்டபடியே கோர்ட்டுக்குள் நுழைந்து குற்றவாளிக் கூண்டில் நின்றார். எதிர் பக்கம் மரணமடைந்த கொத்த்னாரின் சகோதரர் நின்றிருந்தார்.
மாஜிஸ்டிரேட் வழக்குத் தொடுத்தவரைப் பார்த்து, ` நீர் என்ன சொல்கிறீர்? உம் எதிரில் நிற்கும் ஜமீந்தார் உமது தம்பியைக் கொன்றதை நீர் பார்த்தீரா? எப்படிக் கொன்றார்? விவரமாகச் சொல்ல வேண்டும்` என்றார்.
அந்த கொத்தனார் உடனே `ஆமாங்கோ, இதே ஜமீந்தார் என் தம்பியை மரத்தில் கட்டி வைத்துப் பெரிய கயிற்றால் அடித்தே கொன்றார். அதை நான் பார்த்துக் கத்தினேன்` என்றார்.
உடனே குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த ஜமீந்தார் சட்டெனத் தமது முக்காட்டை நீக்கி விட்டுத் தலை நிமிர்ந்து, `இந்தா, என்னைப் பார்த்துச் சொல்லும், கொத்தனாரே! நன்றாக நினைவுபடுத்திச் சொல்லும்` என்றார்.
அவரது முகத்தை நன்றாக உற்றுப் பார்த்த கொத்தனார், `சாமி, இவர் இல்லீங்கோ, இவர் கொல்லவில்லை.` என்று உரத்த குரலில் கூறினான்.
`வழக்குத் தொடுத்த கொத்தனார் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் கொடுத்திருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்` என்று தீர்ப்புக் கூறினார் மாஜிஸ்டிரேட்.
ஜமீந்தார் வேடத்திலிருந்த நோட்டக்காரர் வண்டியில் ஏறிப் புரவி பாளையம் வந்தார்.

புரவி பாளைய ஜமீனின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன? -1

புரவி பாளையம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஒரு ஜமீன்.அங்கு வசித்து வந்த ஜமீந்தார் அரண்மனையில் சுவர் சிறிது பழுது ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக கொத்தனாரை வரவழைத்தார்.
கொத்தனார் அங்கு வேலை செய்யும்போது, அடுத்துள்ள அறையில் தங்க நாணயங்கள்  நிறைந்த செப்புக் குடங்கள் இருப்பதை அறிந்து சுவற்றில் துளை செய்து அடுத்த அறை சென்று ஒரு குடத்தை எடுத்துக் கொண்டார். சுவற்றில் மண்ணைப் பூசி முன் போலவே செய்து விட்டார். பின்பு ஜமீந்தாரிடம் சொல்லிவிட்டு தன் கூலிப் பணத்தையும் பெற்றுக் கொண்டு போய்விட்டார் கொத்தனார்.
அன்று மாலையில் ஜமீந்தார் தமது ஓய்வு நேரத்தில் பழுது பார்க்கப் பட்ட அறைக் கதவைத் திறந்து பார்த்தார். உள்ளே அடுத்த அறைப் பக்கத்துச் சுவரில் ஈரம் பட்டிருப்பதைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அடுத்த அறை சென்று கதவை திறந்து பார்த்தார்.
எட்டுக் குடங்களுக்கு பதிலாக ஏழு குடங்கள் இருந்தன.
ஜமீந்தார் ஒரு ஆளை அனுப்பிக் கொத்தனாரை விசாரித்த போது, அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தங்கக் குடத்தையும் திருப்பிக் கொடுத்தார்.
எனினும் அடங்காத கோபமடைந்த ஜமீந்தார் கொத்தனாரை ஒரு மரத்தில் கட்ட செய்து, மாடு கட்டும் கயிற்றை எடுத்துக் கொண்டு கண்மூடித்தனமாக  அடித்து நொறுக்கினார். கொத்தனாரின் தலை சாய்ந்தது. அவருடைய உறவினர்கள் உடலை எடுத்து செல்ல முடியாதபடி தடுத்து உடலை அங்கேயே புதைக்கச் செய்தார்.
இறந்து போன கொத்தனாரின் உறவினர்கள் போலிசாரிடம் புகார் செய்தனர். அவர்கள் ஜமீந்தாரை கைது செய்ய தயங்கினார்கள். ஆனால் வழக்கை உடுமலை சப் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
கோர்ட்டிலிருந்து ஜமீந்தாருக்கு சம்மன் வந்தது. அவர் அதிர்ச்சி அடைந்தார். துயரத்தால் துடித்தார், கோர்ட்டுக்குப் போவதை அவமானமாக கருதினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர்

  நான் காட்டூரில் வசித்தபோது, என் பழைய நண்பர் காளிதாஸ் தேசாய் என்பவர் ஒரு நாள் என்னைச் சந்தித்தார்.
`சார், என் நண்பர் ஒருவருக்குத் தமிழ் கற்றுத் தர வேண்டும். நீங்கள் வருவீர்களா?` என்று கேட்டார்.
`யாருக்கு?`
` நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த சுபாஷ் சந்திர போஸின் தம்பி சைலேஷ் சந்திர போஸுக்கு கற்றுத் தரவேண்டும். அவர் தற்சமயம் இங்கே (கோவையில்) காளீஸ்வரா மில்லில் மானேஜராக இருக்கிறார். நாளைக்கு உங்களை அழைத்துப் போகிறேன்.` என்றார்.
சந்திப்பு
மறு நாள் போஸ் அவர்களை சந்தித்தேன் - அவர் ஆறு அடி உயரம் இருந்தார். நான் வியப்படைந்தேன். (காரணம் சுபாஷ் அவர்களின் உயரம் குறைவு.)
ஓராண்டு தமிழ் என்னிடம் படித்தார். ஒரு நாள், `மாஸ்டர், நான் 9 மொழிகள் கற்றிருக்கிறேன். உங்கள் தமிழ் மொழி கடினமான மொழி` என்றார்.
 நான் அவரது சந்தேகத்தை போக்கினேன்.
`ட` என்ற எழுத்து ஒரு வார்த்தையில் தனித்து வரும்போது - `da` என்றும் `ட்` என்ற எழுத்துடன் வரும்போது, `ta` என்றும் உச்சரிக்க வேண்டும்.
உதாரணம் - `படம்` என்ற சொல்லில் வரும் `ட` எனும் எழுத்தை  `da` என்றும், `பட்டம்` என்ற சொல்லில் வரும் `ட` எனும் எழுத்தை `ta` என்றும் உச்சரிக்க வேண்டும்  என்று ஆங்கிலத்தில் பேசி விளக்கியபின் அவர் சந்தேகம் நீங்கியது.
ஒரு நாள் அவரிடம் ஒரு செய்தியைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். வழக்கம் போல் ஆங்கிலத்தில் கேட்டேன்.
`சார், தங்கள் மூத்த சகோதரர் சுபாஷ் சந்திர போஸின் மறைவு விமான விபத்தில் ஏற்பட்ட மரணமா? அல்லது வெள்ளையர்களின் சதியா?` என்று கேட்டேன்.
அவர் ஏதும் சொல்லாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டுப் பின்பு சொன்னார், `சார், நாம் பாடம் படிக்கலாம்` என்றார்.
நான் அவரிடம் அக்கேள்வியை ஏன் கேட்டேன் என்று எண்ணி மிகவும் வருத்தப் பட்டேன்.
ஒரு நாள் என்னிடம் `மாஸ்டர், நான் பம்பாய் போய்விடலாம் என நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், இப்போது கேளுங்கள்` என்றார்.
அப்போது என் பிள்ளைகள் சிறுவர்களாகப் படித்துக் கொண்டிருந்தனர். அதனால் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
அவர் என்னிடம் தமது பம்பாய் முகவரியை கொடுத்து விட்டு அடுத்த மாதம் பம்பாய்க்குப் போய்விட்டார். 
அந்த முகவரியை நான் பயன்படுத்தவேயில்லை.