செவ்வாய், 20 அக்டோபர், 2009

பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நாட்டு நடப்பு அறிய ஒரு வழி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாதர் அருள்சாமி அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். நான் வருத்தப் பட்டேன். அவர் என்னிடம் கூறினார்- "நான் அமெரிக்காவுக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. உங்களைப் பற்றிப் பாதர் சின்னையனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் பள்ளியை விட்டு விலக வேண்டாம்" என்று சொல்லிவிட்டு என்னை வாழ்த்தினார். அவருக்கு பிரிவுபசாரம் நடந்தது.
பாதர் சின்னையன் பள்ளியில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். மாணவர்களை விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு ஆசிரியர்கள் பேருந்தில் அழைத்து செல்ல வேண்டும் என்ற புதிய முறையை கொண்டு வந்தார். அதனால் நாடு முழுவதும் சுற்றி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கோவை மாவட்டத்திலேயே முதன்முறையாக - 1958ல் பள்ளிகளில் ஒரு வழக்கத்திற்கு முன்னோடியாக அறிமுகம் செய்த பெருமை எனக்கு உண்டு. அதாவது - பள்ளிக் கட்டிடத்தில் வெளிப்புறச் சுவற்றில் பெரிய கரும்பலகை  கட்டித் தரும்படி கேட்டேன். 
தினமும் காலை 7.30 மணிக்குப் பள்ளிக்குச் சென்று விடுவேன். "The Hindu" பத்திரிக்கையையும் "தினமணி" பத்திரிக்கையையும் பியூன் என்னிடம் கொடுத்ததும் நான் முக்கியமான செய்திகளைக் கரும்பலகையில்  எழுதி வைப்பேன்.  மாணவர்களும் ஆசிரியர்களும் அன்றைய நாட்டுநடப்பு செய்திகளைப் படிப்பார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த பாதர் சின்னையன் எனக்கு  அதற்காக மாதம் ரூ.30/- கொடுத்து வந்தார்.
இதனைக் கண்ட வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் என்னைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
மற்றொரு சிறப்பு உண்டு. அதாவது பிரம்பைக் கையில் தொடாமலேயேஅப்பள்ளியில் இறுதி வரை  பணியாற்றி ஓய்வு பெற்றேன்.



1 கருத்து:

natbas சொன்னது…

தங்கள் தந்தை மேன்மையான மனிதர். நீங்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவரே! வாழ்த்துக்கள்.