செவ்வாய், 8 செப்டம்பர், 2009

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை...


என் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சண்முகத்துக்கு டெக்ஸ்டூலில் ஒரு கிளார்க் வேலை கொடுக்கும்படி பாதரிடம் ஒரு சிபாரிசு கடிதம் கேட்டு வாங்கி கொடுத்தனுப்பினேன். சண்முகம் வேலையில் சேர்ந்தான்.
     பின்பு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். 3 ஆண்டுகள் கழிந்தன. அவனது மாமனார் என்னையும் இலட்சுமியையும் இராமசாமி நகர் வீட்டிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார். காரணம் சண்முகம் சின்னம்மா இலட்சுமியிடமும் குழந்தை தியாகராஜனிடமும் அதிக பாசத்துடன் நடந்து கொண்டான். பாலக்காடு சென்ற அவனுடைய மாமனார் எந்திரம் வாங்கி வந்து அவனுக்குக் கட்டினார்.
      ஒரு நாள் காலை சண்முகம் என்னருகில் வந்து தலை குனிந்தபடியே, `அப்பா, நாம் பிரிந்திருந்தால் நல்லது` என்றான்.
        `சரி, அப்படியே செய்வோம். நீ சந்தோஷமாக இருந்தால் போதும்` என்றேன்.
அன்று காலையிலேயே நான் காட்டூர் சென்று எனது முன்னாள் மாணவனைச் சந்தித்துப் பேசினேன். உடனே அவன் எனக்கு வீடு தருவதாகச் சொன்னான்.
       சண்முகம் மாலையில் கம்பெனியிலிருந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே நாங்கள் குழந்தையுடன் சாமான்களை எடுத்துக் கொண்டு போய்விட்டோம்.
        பின்பு சுலோச்சனா - இராமசாமி திருமணம் நடந்தது. ஒரு ஆண்டு கழித்து சந்திரா - பரமசிவம் திருமணம் நடந்தது. 
        அந்த திருமணங்களுக்கு வாங்கிய கடன்களை, நான் பள்ளியை விட்டு விலகிய பின் கிடைத்த P.F. பணம் கொடுத்துத் தீர்த்தேன். மேலும் என் தகப்பனாருடைய கடனையும் தீர்த்தேன். மீதி ரூ.1000 கொடுத்து, சோமு கவுண்டரிடம் 5 1/2 சென்ட் வீட்டுமனை வாங்கினேன்.
      அந்த இடத்தில் ஒரு வீடு கட்ட எண்ணினேன். என்னுடன் பள்ளியில் பணியாற்றிய நண்பர் திரு.கே.சுப்பிரமணியம் என்பவரிடம் பணம் கடனாகப் பெற்றேன். அந்தக் கடனை மூன்று ஆண்டுகளில் தீர்த்தேன்.
       சுலோ, சந்திரா திருமணங்களுக்கு உதவியவர்கள் என்  மாணவர்களான புரவிபாளையம் ஜமீந்தாரின் மக்கள் திரு.கிரிராஜ், திரு.வெற்றிவேல்.
            இத்தனை பேரையும் நான் மறப்பேனா?

கருத்துகள் இல்லை: