வெள்ளி, 4 செப்டம்பர், 2009

சராசரங்கள் வரும் சுழன்றே...

ஒரு நாள், திருச்சி பங்களாவில் இருந்த போது - பாகவதர் என்னிடம் சொல்லிக் கொண்டு தனியாகவே காரில் புறப்பட்டார். வழியில் போலிஸ் அவரைக் கைது செய்தனர். ஊர் முழுவதும் பரபரப்பு. இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இவரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
            நான் பாகவதரைச் சப் ஜெயிலில் சந்தித்தேன். ஒரு வக்கீலை அழைத்து வரும்படி என்னிடம் சொன்னார். மனவுறுதியுடன் காணப்பட்டார். தினமும் வீட்டிலிருந்து அல்வாவும் இட்லியும் கொண்டு வரச் சொன்னார்.
             திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்பு இலண்டனிலுள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு அப்பீல் செய்தோம். 1944ல் விடுதலையானார்கள். பாகவதரின் புகழ் மங்கியது. மக்களிடையே கர்நாடக இசையின் ரசிகத்தன்மை மாறிவிட்டது.
             நான் கோவைக்கு வந்து விட்டேன். அப்போது கோவை ராஜ வீதியில் உள்ள பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் திருமதி.எம்.டுவெல்ஸ் (M.DWELLS). அவர் கோவை இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு பங்களாவில் வசித்தார். (இப்போது, அங்கு Fire Service Station உள்ளது.)
            அவருக்குத் தமிழ் கற்றுத் தரும்படி ஒருவர் என்னிடம் சொன்னார். நான் ஓராண்டு அவருக்குத் தமிழ் கற்பித்தேன். தமிழ் பேசுவதற்கும் கற்றுக் கொண்டார்.
            கோவைக்கு வந்துவிட்ட என்னை மீண்டும் அழைத்தார் பாகவதர். நாங்கள் பூனாவுக்குச் சென்று, `பிரபாத்` ஸ்டுடியோவில் `ராஜ முக்தி` என்ற படம் எடுத்தோம். படம் தோல்வி அடைந்தது.

கருத்துகள் இல்லை: