ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

தட்டுங்கள் திறக்கப்படும்.

             பூனாவிலிருந்தபோது, பார்வதி கோவிலில் சிவாஜி வைத்திருந்த வாள் (4½ அடி நீளம்) அங்கிருந்ததைப் பார்த்தேன். சற்றுத் தொலைவிலிருந்த ஆகாகான் மாளிகையைப் பார்த்தேன். அங்குதான் காந்தி சிறை வைக்கப்பட்டிருந்தார். அவருடன் இருந்த மனைவி கஸ்தூரிபாயையும் செயலாளர் மகாதேவ தேசாயையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்தார்.
பூனாவிலிருந்து திரும்பிய நான் வேலை தேட எண்ணினேன். ஒரு வாரம் கழிந்தது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் என்னை எதிர்பாராமல் சந்தித்து, மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் (தற்போது கோவை இரயில் நிலையத்திற்கு பின்புறம் இராயல் தியேட்டர் எதிரில் மேனிலைப் பள்ளியாக உள்ளது). ஒரு வேலை காலியாக இருப்பதாகச் சொல்லி, என்னைப் பாதர் அருள்சாமியிடம் அழைத்துச் சென்றார். என்னைப் பற்றிய விவரங்களைப் பாதரிடம் சொன்னார் நண்பர்.
       ”நீங்கள் பாகவதரிடம் இருந்தபோது அவர் கொடுத்த அளவு சம்பளம் என்னால் தரமுடியாது. ரூ.50 மட்டும் தருவேன்” என்றார்.
      ”இந்த சம்பளம் போதாது. நான் சென்னைக்கே போகிறேன்” என்றேன். ”நீங்கள் போகவேண்டாம். உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது என் அறைக்கு வந்து கதவைத் தட்டுங்கள் – உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் இந்தப் பள்ளியில் இருக்கும்வரை நீங்கள் போக வேண்டாம்” என்றார்.
      ”இயேசு கிறிஸ்து சொன்னார் – தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று – அதை நீங்கள் சொல்வதால், நான் பள்ளியை விட்டுப் போக மாட்டேன்” என்று சொன்னேன்.
       அவர் வியப்புடன் “உங்களுக்குப் பைபிள் தெரியுமா?” என்று கேட்டார். நான் சொன்னேன். – “பாதர் நான் இலண்டன் மிஷன் பள்ளியில் (தூய மைக்கேல் மேனிலைப் பள்ளிக்கு பின்புறம் சி.எஸ்.ஐ மேனிலை பள்ளி என்ற பெயரில் உள்ளது) படித்தபோது, பைபிளில் உள்ள St.Mathew, St.Luke படித்தேன். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்வு எழுதிப் பரிசுகளும் பெற்றேன்” என்றேன். “இதை ஏன் முதலில் சொல்லவில்லை?” என்று கேட்டார்.
”தன்னைத்தான் தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் உயர்த்தப்படுவான்” என்று நான் சொன்னபோது அவர் சிரித்தார்.
       சில மாதங்கள் கழிந்தன. 1945ல் ஒரு நாள் பாதர் என்னைத் தமது அறைக்கு மாலையில் வரச் சொன்னார். நான் சென்றேன்.
        ` நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். காட்டூரில் ஒரு சர்ச் இருக்கிறது. முன்புறம் ஒரு டவர் கட்ட வேண்டும். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. உங்கள் பாகவதரிடம் சொல்லி ஒரு பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்து தாருங்கள்` என்றார் பாதர்.
              பாகவதர் கச்சேரி சண்முகா தியேட்டரில் நடந்தது. எதிர்பார்த்ததற்கு மேல் வசூலாயிற்று. பாகவதருக்கு ரூ.2000/-மும் எனக்கு ரூ.500/- ம் கொடுத்தார் பாதர். இன்றும் ஜெயில் ரோட்டிலுள்ள சர்ச்சில் ஒரு டவரைக் காணலாம்.
               பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. நாலைந்து முறை பாதர் எனக்குப் பண உதவி செய்தார்.

கருத்துகள் இல்லை: