செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?

       கோவை செண்ட்ரல் ஸ்டுடியோவில் `சிவகவி` படம் முடிந்தது. `ஹரிதாஸ்` படம் தொடங்கிய போது, பாகவதரின் புகழ் தமிழ் நாடு முழுவதும் பரவியது. - காரணம் - அவரது அழகிய தோற்றமும், கந்தர்வ கான குரலும், மக்களை மயக்கியது.
        இராமனாதபுரத்தில் ஒரு பங்களாவில் தங்கியிருந்தோம். பட முதலாளியும் டைரக்டரும் பாகவதரிடம் மிக்க மரியாதை காட்டினார்கள். சென்னை H.M.V யில் பாகவதரது பாடல்கள் ஒரு கண்ணாடி அறையில் பதிவு செய்யப்பட்டன. நான் அருகிலிருந்து ரசித்தேன். அதனால் எனக்குக் கர்னாடக சங்கீதத்தில் பற்று ஏற்பட்டது.
      படம் முடியும் தறுவாயில் ஒரு நாள் நாங்கள் திருச்சிக்குப் புறப்பட்டோம். எங்கள் செக்ரட்டரி வெங்கட்ராமய்யர் கோவை ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் டிக்கெட் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
      மாலை 6.30 மணிக்குப் புளூமெளண்ட்டன் எக்ஸ்பிரஸ் வந்தது. சிறிது நேரத்தில் இரயில் கிளம்பும் சமயம் கார்டு விசில் ஊதி, பச்சைக் கொடியைக் காட்டினார். இரயில் நகர்ந்தது. இதைக் கண்ட எங்கள் செக்ரட்டரி ஓடிப் போய் கார்டைப் பார்த்து, `சார், பாகவதர் வ்ருகிறார். கொஞ்சம் நிறுத்த முடியுமா` எனக் கேட்டார். கார்டு இரயிலை நிறுத்தி விட்டார். அத்தகைய செயல் இனி எந்தக் காலத்திலும், யாருக்காகவும் நடைபெறாது என எண்ணுகின்றேன். அந்த கார்டுக்கு பிற்காலத்தில் ஸ்டுடியோவில் ஒரு வேலை கொடுக்கச் செய்தார்.
           ஒரு நாள் நாங்கள் திருச்சிக்கு கிளம்பினோம். இரயில் ஈரோடு சந்திப்பில் நின்றது. செக்ரட்டரி பெட்டி படுக்கைகளை எடுத்துச் சென்று ஒரு 2 ஆம் வகுப்பு பெட்டியில் வைத்தார். (3 ஆம் வகுப்பில் குஷன் சீட் கிடையாது). நாங்கள் அந்த பெட்டியில் ஏறினோம். ஒரு சீட்டில் பெரியார் ஈ.வெ.ரா அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் பாகவதர் வணக்கம் செய்தார். அவர் அருகில் நாங்கள் அமர்ந்தோம்.
`வாங்கோ, பாகவதர். உக்காருங்கோ. என்னவோ கேள்விப்பட்டேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் நீங்கள் ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்து விட்டீர்களே!
`அப்படி நான் என்ன செய்து விட்டேன்? சொல்லுங்கோ` என்றார் பாகவதர்.