புதன், 18 மார்ச், 2009

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

என் மனைவி முத்தம்மாள் தோல் சம்பந்தமான ‘எக்ஸிமா’ நோயால் பீடிக்கப்பட்டாள். அவளுக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. பின்பு அவள் விருப்பப்படி பெங்களூரில் உள்ள பெற்றோரிடம் அனுப்பி வைத்தேன். அவளது பிள்ளைகள் சண்முகம், சுலோச்சனா, சந்திரா, என் பெற்றோர் எல்லாரும் நான் அனுப்பும் பணத்தைக் கொண்டு காட்டூரில் (தற்போது கோவை காந்திபுரத்திலுள்ள இராம் நகர் பகுதி) வாழ்ந்து வந்தனர்.
என் மனைவி முத்தம்மாளின் விருப்பத்திற்கிணங்க, என் தாயாரும், என் மனைவி முத்தம்மாளும் சேர்ந்து ஆலாங்கொம்பு சென்று, அங்கு வசிக்கும் சிற்ப வேலை செய்யும் விஸ்வநாதனுடைய மனைவியைச் சந்தித்தனர். அவர்களின் இரண்டாவது பெண் இலட்சுமியை எனக்கு இரண்டாம் தாரமாகத் தரும்படி கேட்டுச் சம்மதம் பெற்றனர். பின்பு எனக்கு கடிதம் எழுதினார்கள். நான் சரியென்று கடிதம் மனைவிக்கு எழுதினேன். திருமணம் பேருர் கோவிலில் வைத்துக் கொள்ளும்படியும், தேதி குறிப்பிட்டு எனக்கு எழுதும்படியும் நான் கடிதம் எழுதினேன்.
குறிப்பிட்ட நாளில் எனக்கும் இலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பாகவதரும் நண்பர்களும் வந்தார்கள். சில நாட்கள் நான் கோவையில் தங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பி விட்டேன்.
இலட்சுமியின் உயர்ந்த குணங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். பொறுமை, குடும்பத்தின் மீது பாசம். இந்த இரு குணங்களும் இலட்சுமியிடம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அது மட்டுமல்ல, எனக்கு தக்க சமயத்தில் நல்ல யோசனை கூறும் மந்திரியாகவும், எனக்கு பணிவிடை செய்வதில் அடிமையைப் போலவும், என் குற்றங்களை மன்னிப்பதில் பூமாதேவியாகவும் விளங்கினாள்.
என் பெற்றோரையும், முதல் மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் அன்புடன் கவனித்துக் கொண்ட அவளது பெருமையைப் பற்றிச் சொல்வது என்றால் - நான் கொடுத்து வைத்தவன் - அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை: