வியாழன், 5 மார்ச், 2009

அழகிய கையெழுத்துக்குக் காரணம்

எனது பள்ளிப் படிப்பைக் கோவை இலண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன். (இன்று அது சி.எஸ்.ஐ என்று அழைக்கப் படுகிறது.) அப்போது பள்ளியின் பிரின்ஸிபால் திரு. 'H.W.NEWWELL' இருந்தார். அவரது சிரித்த முகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.
அது மட்டுமல்ல, அப்பள்ளியாசிரியர்கள் அனைவரும் என் நினைவில் இருக்கிறார்கள். அவர்கள் கற்பித்த முறை, நடந்து கொண்ட விதம் இவற்றை நினைக்கும் போதெல்லாம் உள்ளத்தில் ஒரு விதமான இன்பம் உண்டாகுகிறது. குறிப்பாக, 6ஆம் வகுப்பு ஆசிரியர் திரு. டி.வி.மதுரம் என்பவர் பாடம் நடத்தும்போது, கதைகள் சொல்வார். மேலும், எனது அழகிய கையெழுத்திற்கும் அவர்தான் காரணம். கையெழுத்துக்காகவும் பைபிள் தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றதற்காகவும் எனக்குப் பலமுறை பரிசுகள் (பென்சில்கள், ரப்பர், புத்தகம்) கொடுத்து ஊக்குவித்தார். அவரை நான் மறக்க முடியுமா?
நான் III FORM படித்தபோது (8ஆம் வகுப்பு) ஆங்கிலப் புத்தகத்தில் படித்த ஒரு பாடம் “ நீதிபதியின் கடன்” (வேக், நிகொலஸ் கதை) மாணவர்களை அழ வைத்தது. அக்கதையை நான் எனது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லிக் கண்ணீர் சிந்தும்படி செய்திருக்கிறேன்.
என் நண்பர்களுடன் அருகிலிருந்த போலீஸ் மைதானத்தில் ‘புட் பால்’ விளையாடுவதுண்டு. அந்த நாட்கள் இனிமையானவை. என் தந்தை என்னிடம் 1 ரூபாய் கொடுத்து, கோனியம்மன் கோவில் எதிரிலிருந்த அரிசிக் கடையில் அரிசி வாங்கி வரச் சொல்வார். 12படி அரிசி கிடைக்கும். (7கிலோ) அதை ஒரு பெரிய துண்டில் கட்டிக் கொடுப்பார் கடைக்கார அய்யர். நான் தலைமீது வைத்துக் கொண்டு வீடு திரும்புவேன். எனக்கு 3காசு கிடைக்கும் (1ரூபாய்க்கு 16அணா = 192பைசா).
என் தோற்றம் வேடிக்கையாக இருக்கும். சிரிக்க வேண்டாம் - இடுப்பில் வேட்டி, உடம்பில் சரட்டு, அதன்மேல் ஓப்பன் கோட்டு, தலைமயிர் பின்னி சடை போட்டுவிடுவார் என் தாயார். அப்பாவை ‘ஐயா’ என்று அழைப்பேன். இந்து மாணவர்கள் கிராப் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தலையில் வட்டமான தொப்பி அணிய வேண்டுமென்பது சட்டம். அது ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம்.

கருத்துகள் இல்லை: