செவ்வாய், 3 மார்ச், 2009

காலந் தவறாமை

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அத்துடன் கோவையில் பரவிய கொடிய நோயும் ஓடிவிட்டது. நாங்கள் மீண்டும் உப்பிலிபாளையம் வந்து சேர்ந்தோம். அருகில் ஆடிஸ் வீதியில் உள்ள அந்தோணியார் பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள். ’அறிவிலி’ வகுப்பில் ஆறு மாதம் படித்த பின் முதல் வகுப்புக்கு என்னை மாற்றினார்கள். (ஏழு வயது). ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த ஒரு பாடம் - லேட் லத்தீப் என்பதை ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். லத்தீப் என்ற பையன் தினமும் நேரம் கழித்தே இரயிலுக்குச் சென்று இரயிலைத் தவற விட்டுப் பின் எவ்வாறு துன்பத்தையடைந்தான் என்பது என் உள்ளத்தில் வேருன்றி விட்டது.
அன்று முதல் இன்று வரை எங்கு போவதானாலும் சிறிது நேரத்துக்கு முன் அந்த இடத்துக்குப் போய்விடுவேன். ஒரு நாள் கூட நேரம் கழித்து எங்கும் போனதில்லை - சொல்லப் போனால், ஆங்கிலேயர் நமக்குக் கொடுத்து விட்டுப் போன நல்லப் பழக்கங்களில் ஒன்று, “காலம் தவறாமை” - (punctuality). அதை நாம் மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை: