திங்கள், 2 மார்ச், 2009

நடை பழக்கம்

அந்தக் கிராமம் வெற்றிலைத் தோட்டங்கள் நிறைந்த அழகான பகுதியாக இருந்தது. தோட்டத்தின் அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கும். ஆழமில்லை. அதனால் நான் தினமும் வாய்க்காலில் குளித்து விட்டு, என் வேட்டியைத் துவைத்து எடுத்துக் கொண்டு, உடுத்தியுள்ள ஈர வேட்டியுடன் வீட்டுக்குப் போய் அதை வேறு ஒரு துண்டால் சுற்றி வைப்பேன். அப்போதுதான் மறுநாள் அந்த வேட்டியில் காவி நிறம் உண்டாகும். தேவர் உடுத்தியிருப்பதைப் போல நான் காவி வேட்டியைப் பெருமையாக உடுத்திக் கொள்வேன். வாய்க்கால் கரையில் உள்ள பிள்ளையாருக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, அருகம்புல்லைத் தலை மீது வைத்துக் கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவேன்.
அப்போது என் வயது 5. வீட்டுக்குச் சென்றதும் என் தாயார் வெண்கல வட்டிலில் சிறிதளவு சோளக்களியை வைத்து தண்ணீரை ஊற்றி, அருகில் உலித்த வெங்காயமும் வைப்பார்கள். நான் அதை உண்ட பின் சிறிது நேரம் வெளியே சுற்றி விட்டு வந்து, பிறகு அம்மாவிடம் பால் குடிப்பேன். அந்தப் பழக்கம் என் 5வயது முடியும் வரை இருந்தது.
திரு. நஞ்சப்பத் தேவர் என்னை அதிகமாக நேசித்தார். என் பெற்றோர் என்னை மிகவும் செல்லமாக வளர்ந்தார். தேவர் என்னை அடிக்கடி வெற்றிலைத் தோட்டத்திற்கு அழைத்துப் போவதுண்டு. கொடிக் காலுக்குத் தண்ணீரில் நடந்துதான் போக வேண்டும். அது ஒரு சுகமான அனுபவம்.
அங்கு நாங்கள் உண்பது சோளம், ராகி, கம்பு, தினை ஆகிய தானியங்கள் மட்டும். பண்டிகை நாட்களில் அரிசிச் சோறு. வாழையிலை அதிகமாகக் கிடைக்காது. தையல் இலையில் மட்டும் பெற்றோர் உண்பார்கள். தினமும் கேழ்வரகுக் கழியை என் தட்டில் வைத்து, அதன் மத்தியில் குழி செய்து அதில் நெய் ஊற்றி, பனை வெல்லம் பொடி செய்து போட்டு என்னை உண்ண வைப்பார்கள். சில நாட்களில் கழியை மோருடன் கலந்து கரைத்துக் குடிப்போம்.
என் அக்காவைத் திருப்பூர் அனுப்பர்பாளையத்திலிருந்த தாய்மாமனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். என் தகப்பனார் வாரம் ஒரு முறையேனும் கோவைக்குச் செல்வதுண்டு. அப்போது என்னையும் அழைத்துப் போவார். நாங்கள் 7மைல் தூரம் நடந்தே கோவைக்கு வந்துவிட்டு, 7மைல் தூரம் நடந்தே வீட்டுக்குப் போய் விடுவோம்.
இந்த நடைப் பழக்கம் இன்று வரை இருக்கிறது. என் உடல் நலத்துக்குத் துணையாக இருப்பது எனது நடைதான் 85வயதுக்குப் பின் நடை தளர்ச்சியடைந்தது.

கருத்துகள் இல்லை: