வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

அத்தியாயம் - ௧ - கோவையைத் தாக்கிய பூதம் !

கோவையை அடுத்துள்ளது திருப்பூர். அதைச் சேர்ந்த பகுதி அனுப்பர்பாளையம். அங்கு பித்தளை, செம்பு பாத்திரங்கள் செய்யும் குடும்பங்கள் வாழ்கின்றன.
என் பாட்டனார் திரு. பழனியப்பன் என்பவரும் பாத்திரங்கள் செய்யும் தொழிலாளியாக வாழ்ந்தார். என் பாட்டியின் பெயர் தாயம்மாள். இவர்களுக்குப் பிறந்த எட்டுக்குழந்தைகளில் மூத்த பெண் கன்னியம்மாள்தான் என் தாய். என் தாயார் திருக்குறளும் நைடதமும் ( நளன் - தமயந்தி கதை) நன்கு கற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நைடதம் நூலை இன்று வீரராகவனிடம் தந்து விட்டேன்.
கோவையின் மேற்குப் பகுதியில் உள்ள வேடப்பட்டியில் திரு. மருதாசலன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது இரண்டாவது மகனாகிய் திரு. வீரப்பன் என்பவர்தான் என் தந்தை.
அங்கு நள நாடகம் எனும் கதையை பொம்மலாட்டம் மூலம் மக்களுக்கு காட்டி வந்தார். அவருடைய முன்னோர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும்
என் பாட்டனார் திரு.மருதாசலம் என்பவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர் - முதல் மனைவியின் பிள்ளைகள் ஆந்திராவிலுள்ள க்ர்னூலுக்கும் ( நந்தியால் கிராமம்) கடப்பைக்கும் (ஆதோனி கிராமம்) சென்று விட்டனர்.
இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் இருவர் கோவை உப்பிலிபாளையத்திலும் ஒருவர் வேடப்பட்டியிலும் தங்கி விட்டனர். வேடப்பட்டியில் தங்கியவருக்கு, என் தந்தை சின்னத்தம்பி (எ) வீரப்பன், பெரிய தந்தை பெரிய தம்பி என்பவரும் தங்களுக்கு சொந்தமான வயலை விற்றார்கள். இவர்கள் இருவர் மட்டும் உப்பிலிபாளையத்தில் தங்கிவிட்டனர்.
மூன்றாவது மனைவியின் பிள்ளைகள் வைத்தியர் வீராசாமி என்பவரும் இராமசாமி என்பவரும் மைசூருக்குப் போய்விட்டனர்.
உப்பிலிபாளைய்த்தில் தங்கிவிட்ட சின்னத் தம்பியும் பெரியதம்பியும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.
எனது பெற்றோர் திரு. வீரப்பன், கன்னியம்மாள் ஆகியோருக்குப் பிறந்த பிள்ளைகள் - மாரியாயம்மாள், சுப்பிரமணியன் ( நான்) , அங்கம்மாள் ஆகிய மூவர். நான் பிறந்தது திருப்பூர். வளர்ந்தது கோவை. 1914 ல் கோவையில் தோன்றிய பிளேக் எனும் பயங்கர நோய் மக்களைச் சிதறியோடச் செய்து விட்டது.
என் பெற்றோர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒண்டிப்புதூருக்கு அடுத்துள்ள ஒட்டர்பாளையத்திற்குப் போனார்கள். அங்கே திரு. நஞ்சப்பத் தேவருடைய வீட்டில் வசித்தோம். வீட்டுக்கு வாடகை இல்லை.
அங்கு என் வேட்டியில் காவி நிறத்தை ஏற்படுத்திக் கொண்டேன். எவ்வாறு காவி நிறம் ஏற்பட்ட்து. ஏன் ஏற்படுத்திக் கொண்டேன் என்கிற விவரம் அடுத்த இடுகையில்

கருத்துகள் இல்லை: