வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

எந்தையின் சுயசரிதை

என் தந்தையின் சுயசரிதையிலிருந்தும், என்னிடம் வாய்மொழியாக உரைத்தவற்றிலிருந்து எழுதுகிறேன். (என்னுடைய கருத்துக்களும், என்னுடைய எழுத்துக்களும் அடைப்பு குறியில் குறிப்பிடுகிறேன் - மற்றவை என் தந்தையின் சுயசரிதையிலிருந்து - எனவே, அவரே எழுதுவது போல் அமைந்திருக்கும்)
இந்த சுயசரிதையை அவர் எழுதும் போது அவர் வயது எண்பத்தியேழு (87)
முன்னுரை
நம் பாரத நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு ஒரு சமயம் கூறிய சில வாக்கியங்கள் இங்கு குறிப்பிடுதல் அவசியம் எனக் கருதுகிறேன்.
“ நாட்டின் பெரிய, சமூக, அரசியல், ஆன்மீகத் தலைவர்களின் ஒப்பற்ற வாழ்க்கைக் குறிப்புக்கள் எல்லாம் நம்மைச் சிந்திக்க வைப்பதுடன் அவற்றைப் பின்பற்றவும் செய்கின்றன. நாம் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது, நமக்குப் பின்னால் காலம் எனும் மணலில் நம் அடிச்சுவடுகளைப் பதிய வைத்துக் கொண்டே போய்விடுகிறோம் இறுதியில்”
இந்த வாக்கியங்கள் அடிக்கடி என் நினைவில் தோன்றுவதுண்டு. எனவே, என் நினைவு அலைகளில் கிடைத்த வாழ்க்கைக் குறிப்புகளை இயன்றவரை இங்கு எழுதுகிறேன். குறிப்புகள் வரிசைப்படி இல்லை. காரணம் - என் 87-ஆம் வயதில் நினைவாற்றல் குறைந்துள்ளது.
இதை எழுதுமாறு என் அன்பு மக்கள் இரவிச் சந்திரனும் வீரராகவனும் என்னைத் தூண்டினார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: