செவ்வாய், 17 மார்ச், 2009

”இராஜன் மகாராஜன்”

தியாகராஜ பாகவதர் காலையில் எழுந்த பின், பன்னீர் கலந்த தண்ணீரில் குளித்து விட்டு, பட்டாடைகள் அணிந்து, வைரக் கடுக்கண், கழுத்தில் வைரம் பதித்த சங்கிலி, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கை விரல்களில் ஆறு வைர மோதிரங்கள், ஷர்ட் பொத்தான்களும், cufflinksகளும் வைரங்கள் மின்ன அணிந்து கொள்வார்.
இத்தனை அலங்காரங்களுக்குமேல் வாசனைத் திரவியங்கள் சட்டையில் தெளித்துக் கொண்டு, சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட நாற்காலியில் வெளியே முன்கூடத்தில் அமருவார். என்னையும் அருகில் அமரச் செய்வார். அவரது நண்பர்கள் மூவர் தினமும் அங்கே வந்து போவார்கள்.
எனக்கு ஒரு வைர மோதிரமும், பட்டு சட்டையும் ஜரிகை வேட்டியும் தந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் உண்ட உணவு வகைகள் --------
அவருக்குத் தங்கத் தட்டு. எனக்கும் அவரது நண்பர்களுக்கும் வாழையிலை.
மூன்று வகை இனிப்பு, மூன்று வகை சாதம், மூன்று வகைப் பொரியல், மூன்று வகைப் பாயாசம், மூன்று வகை ரசம், மூன்று வகைக் குழம்பு - தயிர் மட்டும் ஒரே வகை !
இவற்றைக் கண்ட நான் பிரமித்துப் போனேன். நான் தேவலோகத்தில் இருப்பதாக ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.
இந்த இருபதாம் நூற்றாண்டில் எந்த ஒரு அரசனும் அனுபவிக்காத சுகபோகத்தை அனுபவித்தவர் பாகவதர் ஒருவரே.
ஒரு அதிசயமான செய்தி - நான் அவருடன் தங்கியிருந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறைகூட அவர் தமது தலைமுடியை வெட்டிக் கொண்டதில்லை - காரணம் தலைமயிர் வளர வளர நுனியில் தேய்ந்து விட்டது. அவர் காலத்தில் இளைஞர்கள் ‘பாகவதர் கிராப்’ என்று சொல்லி கொண்டு தாங்களும் வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
அப்போது என் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துயரச் செய்தியைப் பற்றி அடுத்த இடுகையில்.

கருத்துகள் இல்லை: