செவ்வாய், 10 மார்ச், 2009

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? - தியாகராஜ பாகவதர்

ஒரு நாள். ஆம், அந்த ஒரு நாள். நான் காட்டூரிலிருந்து காமாட்சியம்மன் கோவிலுக்குப் பெரியகடைவீதி வழியே போய்க்கொண்டிருந்தபோது, நகைக் கடையிலிருந்து வெளியே வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார் திரு. மீனாட்சி சுந்தரம்.
“ஐயா, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அதாவது, என் நண்பர் திரு. தியாகராஜ பாகவதருக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும். அவர் பங்களா இராமனாதபுரத்தில் இருக்கிறது. நீங்கள் வர முடியுமா?” என்று கேட்டார். நான் சரியென ஒப்புக் கொண்டேன்.
மறு நாள் அந்த நண்பருடன் பாகவதர் பங்களாவுக்குச் சென்றேன். அவர் என்னைப் பார்த்து வணக்கம் செய்தார். எனக்கு வயது 33. என் தோற்றம், பேச்சு அவரைக் கவர்ந்துவிட்டன. இரவு 10மணி முதல் 12வரை டியூஷன் வகுப்பு நடந்தது. இரவில் அங்கு தங்கிவிட்டுக் காலையில் அவருடைய காரில் வீட்டுக்குத் திரும்புவேன்.
ஒரு நாள் பாகவதர் சொன்னார் - “ஐயா, நீங்கள் என்னிடம் தங்கிவிடுங்கள். நான் அடிக்கடி திருச்சிக்கும் சென்னைக்கும் போகவேண்டியிருப்பதால் என்கூடவே நீங்கள் வருவதை விரும்புகிறேன். பள்ளி வேலையை விட்டுவிடுங்கள்” என்றார். நான் முடியாது என மறுத்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னை வற்புறுத்தியதால், நான் முனிசிபல் கமிஷனரை அணுகி எல்லா விவரங்களையும் சொன்னேன். அவர் சொன்னார் - “உங்களுக்கு 5ஆண்டுகள் லீவ் தருகிறேன். நீங்கள் பள்ளியில் 36ரூபாய் வாங்குகிறீர்கள். பாகவதரிடம் 125ரூபாய் வாங்குவதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றேன். இராஜினாமா செய்ய வேண்டாம்” என்றார்.
நூறு ரூபாய் நோட்டை முதன்முதலில் பாகவதர் எனக்குக் கொடுத்தபோதுதான் பார்த்தேன். விரைவில் ஒரு முடிவுக்கு வந்தேன். குடும்பத்தின் வறுமை நிலையை போக்குவதற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். பள்ளி வேலையை விட்டுவிட எண்ணி இராஜினாமா செய்து பாகவதரின் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டேன்.
அவருக்கு இரவில் டியூஷன். பகலில் அவருடைய (பி.ஏ) உதவியாளர் ஆக இருந்தேன். 15 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் போய்வருவேன்.
திருச்சியில் பாகவதருடைய பங்களா பிரமாண்டமாக இருந்தது. அவரது வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதைப் பற்றி அடுத்த இடுகையில்...

1 கருத்து:

ஜெ. ராம்கி சொன்னது…

சுவராசியமாக இருக்கிறது. நேருவிடம் பாகவதர் இருமுறை ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார் என்று படித்திருக்கிறேன,, தொடர்ந்து எழுதுங்கள், நன்றி