ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

பாகவதரிடமிருந்து பிரிந்து வந்தேன்...

கோவைக்கு வந்துவிட்ட என்னை மீண்டும் அழைத்தார் பாகவதர். நாங்கள் பூனாவுக்குச் சென்று, ‘பிரபாத் ஸ்டுடியோவில் ‘ராஜ முக்தி’ என்ற படம் எடுத்தோம். படம் தோல்வியடைந்தது.
            பாகவதருக்கு ஒரு ஆள் தினமும் ஒரு பாட்டிலை மறைவாக எடுத்துச் செல்வதைக் கண்ட நான் மனம் மாறினேன். அவருடன் தங்கியிருக்க விரும்பவில்லை.ஒரு நாள் பாகவதர் என்னைப் பார்த்து “உங்கள் விரலில் இருந்த வைரமோதிரம் காணவில்லையே?” என்று கேட்டார்.
             ”நாம் திருச்சியில் இருந்தபோது உங்கள் தம்பி ஒரு திருமணத்துக்குப் போகவேண்டும் என்று சொல்லி மோதிரத்தைக் கேட்டார். நான் கொடுத்தேன்.
             தவிர ஒரு நாள் பி.ஏ. தேர்வு எழுத என்னிடமிருந்த ‘sheffers pen’ கேட்டார். (அதன் விலை ரூ.210. பிளாட்டினம் நிப் உடைய தங்க நிறமுள்ள பேனா) கொடுத்தேன்” என்று நான் சொன்னேன்.
            ”நீங்கள் ஏன் திரும்பக் கேட்டுப் பெறவில்லை?” என்று கேட்டார் பாகவதர். ”அவர் கொடுக்கவில்லை. நானும் கேட்கவில்லை” என்று சொன்னேன். “நீங்கள் ஒரு சாமியாராக இருக்க வேண்டியவர்” என்றார் பாகவதர். நான் சிரித்துக் கொண்டேன்.
            சிறிது நேரம் கழித்து, நான் “என் மனைவி என்னை ஊருக்கு வரும்படி கடிதம் எழுதியிருக்கிறாள். நாளைக்கு நான் புறப்பட வேண்டும்.” என்றேன். ”சரி, புறப்படுங்கள். ஆனால் நான் உங்களுக்கு ஏதும் கொடுக்கவில்லையே. ஒரு வீடு வாங்கித் தர நினைத்தேன்” என்றார். ”பரவாயில்லை. அந்த பாக்கியம் எனக்கு இருக்குமானால், நிச்சயமாக, ஒரு நாள் எனக்குக் கிடைக்கும். உங்களுடைய நட்பு இருந்தால் அது போதும்” என்றேன்.

கருத்துகள் இல்லை: