திங்கள், 21 டிசம்பர், 2009

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

இரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்ய எண்ணிக் கொண்டிருந்த வேளையில், என் அன்பு மனைவி இலட்சுமியின் உடல் நலம் கெட்டு விட்டது. டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் இலட்சுமியைச் சேர்த்தேன். 10 மாதங்கள் அங்கு சிகிச்சை அளித்தும் பயனில்லை. பின்பு, சென்னையிலுள்ள டாக்டர் அரங்கபாஷ்யம் மருத்துவமனைக்கு இலட்சுமியை அழைத்துச் சென்றார்கள் என் மக்கள் - மருமகள் மணிமேகலை ஆகியவர்கள். டாக்டர் அறுவை சிகிச்சை செய்தார். எல்லோரும் லட்சுமிக்கு உதவியாக சென்னையில் ஒரு லாட்ஜில் தங்கினார்கள். ஒரு மாதத்துக்குப் பின் லட்சுமியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள். பணம் நிறைய செலவு செய்தும் லட்சுமி முழுமையாக குணமாகவில்லை. இங்கு 2 மாதம் மருத்துவ மனையில் (குமரன் மருத்துவமனையில்) சேர்த்து சிகிச்சையளித்தோம். அத்தனையும் வீணாகிவிட்டன. ஏன்? அதுதான் விதி.
என் அன்பு மனைவி இலட்சுமியை 22.9.1992ல் இழந்து மீளாத் துயரத்தில் ஆழ்ந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் - என் ஆயுட்காலம் முழுவதும் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி இது.
ஒராண்டு கழிந்தது. லட்சுமியின் மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவிய அத்தனை பேருக்கும் பணம் திருப்பி கொடுக்க வேண்டாமா?
ஆகவே, எங்களுக்கிருந்த ஒரே சொத்து 5 1/2 செண்ட் காலி வீட்டுமனை அந்த இடத்தை விற்றுக் கடன்களைத் தீர்த்துவிட எண்ணினேன்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும். இலட்சுமி உயிருடன் இருந்தபோது, எங்கள் வீடு சிறிது பழுதடைந்தது. அதனால் இடிந்த வீட்டின் கூரையைப் பிரித்து ஓடுகளையும் மரச்சட்டங்கள் கதவு, சன்னல் எல்லாவற்றையும் சுலோச்சனாவுக்குக் கொடுத்து விட்டோம்.( அன்பளிப்பாக). அவள் அவற்றை லாரியில் ஏற்றி பல்லடத்துக்கு எடுத்து போய்விட்டாள்.
வீட்டுமனையை ஒரு இலட்சத்து 55 ஆயிரத்துக்கு அருகே வசித்த திரு.சுப்பிரமணிய அய்யருக்கு விலைக்கு கொடுத்து விட்டோம். அந்த பணத்தை கலைச்செல்வனுக்கும், பானுமதிக்கும், சம்பந்தி திரு.சீனிவாசனுக்கும், மணிமேகலைக்கும் கொடுத்து கடனை தீர்த்து விட்டோம். ஆனால் இரவிச்சந்திரன் மட்டும் தான் கொடுத்த சீட்டுப் பணம் ரூபாய் 10,000 திரும்ப பெற விரும்பவில்லை. `அம்மாவுக்குக் கொடுத்த உதவியை நான் திரும்ப பெற மாட்டேன்` என்று சொல்லியது அவனது பெருந்தன்மையை காட்டுகிறது. மீதியிருந்ததோ ரூ.3000. அதனை வீரராகவனுக்கு கொடுத்து விட்டோம். (அந்த பணத்தில் நான் இரு புத்தக அலமாரி செய்தேன் - வீரராகவன்).
எல்லாம் முடிந்தது. என் மனம் நிம்மதியடைந்தது.

கருத்துகள் இல்லை: