ஞாயிறு, 6 டிசம்பர், 2009

பிரதமர் இந்திராகாந்தியுடன் ஆசிரியர்கள் சந்திப்பு

ஒரு நாள் பாதர் பிரதமரை பார்த்து வர எண்ணினார். எங்கள் பள்ளியில் பணியாற்றிய திரு.கே.சுப்பிரமணியம் என்கிற கணித ஆசிரியரின் தமையனார் டெல்லியில் இராணுவப் பிரிவில் ஒரு ஆபிசராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மூலமாக பிரதமர் இந்திராகாந்தி அவர்களை பார்க்க ஏற்பாடு செய்தோம்.
ஏப்ரல் மாத விடுமுறையில் பாதர் சின்னையன் தலைமையில் ஆசிரியர்கள் புறப்பட்டோம். டெல்லியை அடைவதற்கு முன்பு 110 மைலுக்கு முன்னுள்ள ஆக்ராவை அடைந்தோம். மன்னர் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டிய பளிங்குக் கல்லால் ஆன ‘தாஜ்மகாலை’ப் பார்த்து மகிழ்ந்தோம்.
பின்பு டெல்லியை அடைந்தோம். சப்தர்ஜங் சாலையில் பிரதமரின் இல்லம் இருப்பதால் 1 கிலோ மீட்டருக்கு முன் இராணுவக் காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். எங்களிடமிருந்த அனுமதி கடிதத்தைக் காட்டினோம்.
ஒரு மணி நேரத்துக்குப் பின்னால் எங்களை அனுமதித்தார்கள். அவரது இல்லம் சிறியதாயிருந்தது. ஒரு அறையில் காத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் பிரதமர் வந்தார். நாங்கள் வணக்கம் சொன்னோம். கைகூப்பி வணக்கம் செய்து எங்களை அமரச் சொன்னார்.
“ நாங்கள் கோயம்புத்தூரிலிருந்து வருகிறோம். தூய மைக்கேல் பள்ளி ஆசிரியர்கள். தங்களைக் காண 2000 மைல் தொலைவிலிருந்து வந்திருக்கிறோம். உங்கள் அறிவுரையைத் தாருங்கள்” என்றேன்.
பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், “ நீங்கள் ஆசிரியர்கள். உங்களுக்கு நான் என்ன சொல்வது? மாணவர்களுக்கு நாட்டுப் பற்றைக் கற்றுக் கொடுங்கள். இந்தியாவின் பெருமையை அவர்கள் உண்ருமாறு எடுத்துச் சொல்லுங்கள்” என்றார்.

பிறகு மேலும் ஆசிரியர்களின் கடமையையும் மாணவர்களின் பொறுப்பையும் பற்றி எங்களுடன் சிரித்தபடியே உரையாடினார். பிறகு அவருடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.

கருத்துகள் இல்லை: