ஞாயிறு, 6 டிசம்பர், 2009

அதிசயங்களே அசந்து போகும் அதிசயம்....

ஐதராபாத்திலுள்ள சாலார்ஜங் மியூசியத்தில் உள்ளது “மகதலேனாள்” எனும் சிற்பம். பெண்ணின் முகம் துணியால் மூடப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, அது துணியல்ல, சிற்பி அவ்வாறு சலவைக் கல்லில் செய்திருக்கிறான். அதை எப்படி செய்தான்? அதைப் பார்த்து பிரமித்துப் போனேன். உலகெங்கும் சிற்பக்கலை புகழ் பெற்று விளங்குகிறது.
அந்த ஒரு சிலைக்கு மட்டும் 5 கோடி தருவதாக (அந்த காலக் கட்டத்தில்) நிஜாமிடம் வெள்ளைக்காரர்கள் வெளியேறும்போது விலைக்கு கேட்டார் நிஜாம் மறுத்து விட்டார். - இந்த செய்தியை ஒரு காவலாளி எங்களிடம் சொன்னார்.
வெனிஸ் நகரத்தின் சிற்பி பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். - ஏன்? நானும் ஒரு சிற்பி. எனது சிற்பத்தை தூய மைக்கேல் மேனிலைப் பள்ளியில் வைத்துவிட்டு வந்தேன். அதன் அருமையை அறியாதவர்கள் அதை அழித்து விட்டார்கள். (அதன் புகைப்படம் உள்ளது. விரைவில் இடுகையில் வெளியிடுகிறேன் - வீரராகவன்).
வழியில் கோவா சென்றோம். அங்கே இன்னொரு அதிசயம் கண்டேன்.
எங்களை ஒரு ச்ர்ச்சுக்குள் கூட்டிச் சென்றார் பாதர் சின்னையன்.
ஒரு கண்ணாடிப் பெட்டியில் செயிண்ட் பிரான்சிஸ் எனும் கத்தோலிக்கப் பாதிரியாரின் உடல் 400 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1964ல் பார்த்த உடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வெளியே எடுத்து வந்து மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். நாங்கள் பார்த்தபோது உடல் 3 1/2 அடி நீளமாகக் குறைந்து இருந்தது. இனி, கி.பி 2012ல் பார்க்க முடியும்.
பின்பு நாங்கள் பம்பாய்க்குச் சென்றோம். அன்று மாலையில் மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் போப்பாண்டவர் பேசினார். அவரது பேச்சை அப்போதே டைப் செய்து மக்களுக்கு அதன் பிரதிகளை வழங்கினார்கள். எங்கள் பாதருக்கும் ஒன்று கிடைத்தது. அந்த பிரதியைப் பாதர் என்னிடம் கொடுத்தார். நான் அதை எனது டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
பம்பாய் பயணம் ஒரு இனிய அனுபவம்.
ஒரு நாள் பாதர் சின்னையன் எனக்கு ஒரு அழகான கண் கண்ணாடி வாங்கி கொடுத்தார். அதை ஓராண்டுக்கு மேல் அணிந்து கொண்டிருந்து விட்டு பின் நீக்கி விட்டேன். அவருக்கு பக்குவமாக சொல்லி சமாதானம் செய்து விட்டேன்.
( என் தந்தை பிறகு இறுதி வரை கண்ணாடி அணியவே இல்லை. நானோ பத்து வயதிலேயே என் தந்தையாரின் அறிவுரை கேளாது இரவிலும் போதிய வெளிச்சமில்லாத சமயத்திலும் படுத்து கொண்டே படித்த பழக்கத்தினால் கண்ணாடி அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. - வீரராகவன்)
பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சென்று பார்த்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம். அதைப் பற்றி அடுத்த இடுகையில்

கருத்துகள் இல்லை: